ஆலந்தூர்- ஏர்போர்ட் இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் தொடக்கம்
சென்னை: சென்னையில் ஆலந்தூர்- விமான நிலையம் இடையே உயர்நிலைப் பாதையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் தொடங்கியுள்ளது. விரைவில் பயணிகள் போக்குவரத்து தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் முதல்கட்டமாக கோயம்பேடு - ஆலந்தூர் இடையே ரயில் சேவை தொடங்கப்பட்டது. இதில் தற்போது ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, ஆலந்தூர் - விமான நிலையம் இடையேயான உயர்நிலைப் பாதை பணி முடிவடைந்துள்ளது.
இந்த வழித் தடத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் ஜூலை 28, 29-ஆம் தேதிகளில் ஆய்வு செய்தனர். அப்போது, ஆய்வில் முழு திருப்தி இருப்பதாக தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த மார்க்கத்தில் சோதனை ஓட்டம் இந்த ஆகஸ்ட் முழுவதும் சோதனை ஓட்டம் நடைபெறும் என்றும் பின்னர் பயணிகள் போக்குவரத்து தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டதும், கோயம்பேடு முதல் விமான நிலையம் வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும். இதன் மூலம் விமான நிலையம் செல்லும் பயணிகள் மற்றும் விமான நிலையத்தில் இருந்து கோயம்பேடு செல்லும் பயணிகள் விரைவில் வந்து செல்ல முடியும்.
அடுத்ததாக, சின்னமலை - ஆலந்தூர் இடையேயான பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த வழித்தட பாதுகாப்பு ஆய்வுப் பணிகள் நிறைவடைந்ததும் சோதனை ஓட்டம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.