சென்னையில் புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட மெட்ரோ ரயில்சேவையில் ஒரே நாளில் 1 லட்சம் பேர் இலவச பயணம்
சென்னையில் புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட மெட்ரோ ரயில் சேவையில் ஒரே நாளில் ஒரு லட்சம் பேர் இலவச பயணம் செய்துள்ளனர்.
சென்னை : சென்னையில் சென்ட்ரல் - நேரு பூங்கா மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் ஆகிய இரண்டு புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது. திறப்பு விழாவையொட்டி இலவச பயணம் அறிவித்ததில், நேற்று ஒரே நாளில் 1.20 லட்சம் மக்கள் அதில் பயணித்துள்ளனர்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, மெட்ரோ ரயில் வழித்தடங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே, இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை புதிதாக இரண்டு வழித்தடங்கள் திறந்து வைக்கப்பட்டது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் நேரு பூங்கா வரையிலும், சின்னமலை முதல் டிஎம்எஸ் வரையிலும் புதிய மெட்ரோ வழித்தடங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 25ம் தேதி துவக்கி வைத்தார்.
திறப்பு விழாவையொட்டியும், ரயில் சேவை குறித்த விழிப்பு உணர்வுக்காகவும் 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை மெட்ரோவில் இலவசமாக பயணிக்கலாம் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்து இருந்தது.
அதன்படி, நேற்று மட்டும் இந்த வழித்தடங்களில் 1,20,500 பேர் பயணித்துள்ளனர். மேலும், இன்று மெட்ரோ ரயில் இலவச சேவையின் கடைசி நாள் என்பதால், இன்றும் பயணம் செய்ய கூட்டம் அலைமோதுகிறது.