சென்ட்ரல்- நேரு பூங்கா இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்
சென்னை சென்ட்ரல் - நேரு பூங்கா இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடந்தது.
சென்னை: சென்னை சென்ட்ரல்- நேரு பூங்கா இடையே சுரங்க பாதை பணிகள் நிறைவடைந்ததை அடுத்து அங்கு சோதனை ஓட்டம் நடைபெற்றது.
சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது.
கோயம்பேடு- ஆலந்தூர், சின்னமலை- விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம்- நேரு பூங்கா வரை சுரங்கப் பாதையிலும், மெட்ரோ ரயில் போக்குவரத்து தற்போது நடந்து வருகிறது.
நேரு பூங்கா- சென்ட்ரல் வரையிலான 2.5 கிலோ மீட்டர் தூரத்துக்கான சுரங்க பாதை பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த வழித்தடத்தில் தற்போது சோதனை ரயில் ஓட்டம் நடைபெற்றது.
மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் சோதனை ஓட்டம் நிகழ்ச்சி நடந்தது. சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்ததாக மெட்ரோ ரெயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ரயில் தளத்தின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து முடித்தபின்னர் மெட்ரோ ரயில் இயக்க அனுமதி கிடைக்கப் பெறும். சென்ட்ரல்- விமான நிலையத்துக்கு மெட்ரோ ரயில் நேரடி சேவை ஓரீரு மாதங்களில் தொடங்கப்படும்.