சென்ட்ரல் வரை மெட்ரோ ரயில்.... மார்ச் மாதம் சேவை தொடங்கும்
இறுதிக்கட்டப்பணிகள் நடைபெற்று வருவதால் வரும் மார்ச் முதல் சென்ட்ரல் வரை மெட்ரோ ரயில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: தண்டவாளம், சிக்னல் அமைக்கும் பணிகள் நிறைவு அடைந்துள்ளதால் வருகிற மார்ச் மாதம் சென்னை நேரு பூங்கா-சென்டிரல் இடையே சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் போக்குவரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த அதிகாரிகள், தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, சர்.தியாகராய கல்லூரி, கவுரி ஆஸ்ரம், தங்கல், சுங்கச்சாவடி, திருவொற்றியூர் ஆகிய 7 மெட்ரோ ரெயில் நிலையங்களில் மட்டும் கட்டுமானப்பணிகள் நடந்து வருகிறது.
மீதம் உள்ள ரெயில் நிலையங்களில் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்து, தரைத்தளம், படிக்கட்டுகளில் கற்கள் பதிப்பது, மின்னணு கருவிகள் பொருத்துவது போன்ற பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது.
சுரங்கப்பாதையில் நேரு பூங்கா- சென்டிரல் மார்க்கமாக உள்ள பாதையில் வரும் மார்ச் மாதம் ரெயில் போக்குவரத்தை தொடங்க திட்டமிட்டு உள்ளோம். விரைவில் இந்த பாதையில் சோதனை ஓட்டம் நடத்தப்படும். இதைத் தொடர்ந்து பாதுகாப்பு ஆணையரும் ஆய்வு செய்ய உள்ளார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் பெரும்பாலான பாதையில் மெட்ரோ ரெயில் போக்குவரத்தை தொடங்கி விடுவோம். வண்ணாரப்பேட்டை-விம்கோநகர் பாதையில் அடுத்த ஆண்டு ரெயில் போக்குவரத்து தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன, என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.