தமிழ்நாட்டில் கொட்டித்தீர்த்த பருவமழை 91 சதவீதம்: வானிலை ஆராய்ச்சி மையம்
சென்னை: இந்தியா முழுவதுமான பருவ மழை அளவீட்டில் தமிழ்நாட்டில்தான் வடகிழக்கு பருவமழை சராசரியாக 91 சதவீதம் பெய்துள்ளது என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் தென் மேற்கு பருவமழையின்போது அதிக மழையை தந்தாலும் தமிழ்நாட்டை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழையின்போதுதான் அதிக அளவு மழை கிடைக்கும்.
கடந்த வருடம் வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் பொய்த்தது. ஆனால் இந்த வருடம் வழக்கத்தை விட கூடுதலாக மழை பெய்யும் என்று வானிலை அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் இந்த வருடம் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது. வடமாவட்டங்களில் போதிய மழை பெய்யவில்லை. ஏரிகள், குளங்கள் நிரம்பவில்லை. ஆனால் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இந்த வருடம் பலத்த மழை பெய்துள்ளது. அதனால் அணைகள், ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிகின்றன.
ஆனால் போதிய தடுப்பு அணைகள் கட்டாததால் தாமிர பரணி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு வீணாக கடலில் கலந்து வருகிறது. அதனால் புதிததாக அணைகள் கட்டவேண்டும் அல்லது தடுப்பு அணைகளாவது அதிக அளவில் கட்டவேண்டும் என்றும் விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இதுகுறித்து வானிலை அதிகாரிகள் தெரிவிக்கையில், "இந்த வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழ்நாட்டில் சராசரியாக 44 செ.மீ மழை பெய்ய வேண்டும். நேற்று வரை 40 செ.மீ மழை பெய்துள்ளது. இது 91 சதவீதம். இன்றும்தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது" என்று தெரிவித்துள்ளனர்.