சென்னையில் இன்று இடியுடன் கூடிய மழையாம்... ரெயின் கோட் கொண்டு போக மறந்துடாதீங்க!
சென்னை: வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை கடலோர கர்நாடகா பகுதியில் தீவிரம் அடைந்துள்ளது. இதனால் கடந்த ஒரு வாரமாக கேரளா, கடலோரா கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது.
அதேபோல் தமிழகத்திலும் கடந்த சில நாள்களாக மழை பெய்துள்ளது. இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு வட தமிழகத்தை ஒட்டியுள்ள கடலோர பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை இருந்தது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை
இதன் எதிரொலியாக காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை பெய்தது. குமரி கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருகிறது.
தெலுங்கானா வரை பரவும்
இதனால் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கையில், குமரி கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இது தெலுங்கானா மாநிலம் வரை பரவி வருகிறது.
2 நாள்கள் மழை
அடுத்த 24 மணி நேரத்தில் அதாவது இன்று தாழ்வுநிலையால் சாதகமான சூழல் ஏற்படும்போது தமிழக கடலோர பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடலோர ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதியில் அடுத்த 2 நாள்களுக்கு மழை பெய்யும்.
தமிழகம் மற்றும் புதுவையில்...
மேலும் வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும். சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மாலையோ அல்லது இரவிலோ இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.
நேற்றைய மழை அளவு
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெய்த மழை அளவு, பெரியாறு 7 செ.மீ., சின்னக்கல்லாறு, வால்பாறை ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ., மங்களபுரம் 3 செ.மீ., சேலம், நடுவட்டம், ஜி பஜார், விராலிமலை, செய்யூர், குளச்சல் ஆகிய இடங்களில் 2 செ.மீ. மழை பெய்துள்ளது.