தண்ணீர் தட்டுப்பாடு? குடிநீர் ஆதாரங்களைத் தேடி பயணிக்கும் லாரிகள்
சென்னை: சென்னையில் மெட்ரோ குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், லாரி தண்ணீர் வேண்டி பதிவு செய்பவர்களுக்கு பல நாட்களுக்கு பிறகே குடிநீர் கிடைப்பதாக பொது மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதற்குக் காரணம் தண்ணீர் ஆதாரங்களைத் தேடி சென்னையில் இருந்து நெடுந்தொலைவு பயணிக்க வேண்டியிருப்பதாக கூறுகின்றனர் லாரி உரிமையாளர்கள். விவசாயிகளுக்கு அதிக பணம் கொடுக்க வேண்டியிருப்பதால் குடிநீர் வாரியம் நிர்ணயித்துள்ள கட்டணம் மிகவும் குறைவாக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
சென்னையில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டினைப் போக்க தண்ணீர் லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சென்னை குடிநீர் வாரிய லாரிகள், தனியார் லாரிகள் என 1500க்கும் மேற்பட்ட லாரிகள் தினந்தோறும் இயக்கப்படுகின்றன. இவை காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீரை எடுத்து வந்து நகர்பகுதிகளுக்கு சப்ளை செய்கின்றன. தென் சென்னைக்கு தண்ணீர் வழங்கும் லாரிகள் மேடவாக்கம் முதல் திருப்போரூர் வரையில் உள்ள கிராமங்களின் நிலத்தடி நீரை எடுத்து வருகின்றன.
தண்ணீர் தட்டுப்பாடு
வட சென்னைக்கு நீர் வழங்கும் லாரிகள் செந்நீர்குப்பம், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளின் நிலத்தடி நீரை பயன்படுத்தி வருகின்றன. இப்பகுதிகளிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் புதிய இடங்களில் இருந்து தண்ணீர் எடுத்து வருவதாக லாரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
புதிய குடிநீர் ஆதாரங்கள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வெண்பேடு, ஈச்சங்காடு, காயாறு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய கிணறுகளிலிருந்து இந்த ஆண்டு புதிதாக நீர் எடுக்க ஆரம்பித்துள்ளனர் தண்ணீர் லாரி உரிமையாளர்கள்.
குறைந்து போன சப்ளை
திருமழிசை, காரணோடை உள்ளிட்ட பகுதிகளில் இந்த முறை நீர் எடுக்க ஆரம்பித்துள்ளனர். தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக தினமும் பத்து ட்ரிப்களை அடிக்கும் லாரிகள் ஏழு அல்லது எட்டு முறை மட்டுமே தண்ணீரை செல்கின்றன.
அணிவகுக்கும் லாரிகள்
பெரும்பாலான தண்ணீர் லாரிகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து தண்ணீர் எடுத்து வருவதால் பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல்சாலை, ஜி.எஸ்.டி சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.
கட்டணம் எவ்வளவு
சென்னை குடிநீர் வாரியம் சமீபத்தில் தனியார் தண்ணீர் லாரிகளுக்கு அதிகபட்ச கட்டணத்தை நிர்ணயித்தது. அதன்படி 20 ஆயிரம் லிட்டர் தண்ணீருக்கு ரூ.2,200 மற்றும் 12 ஆயிரம் லிட்டர் தண்ணீருக்கு ரூ.1,200 வசூலிக்க அறிவுறுத்தப்பட்டது. ஆனால் இந்த கட்டணம் மிகவும் குறைவு என்று லாரி உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
விவசாயிகளுக்குக் கட்டணம்
விவசாய கிணறுகளிலிருந்து கட்டணம் செலுத்தி லாரிகள் மூலம் நீர் எடுத்து வருகின்றனர். விவசாயிகளுக்கு தர வேண்டிய தொகை இந்த ஆண்டு அதிகரித்துள்ளதாலும், அதிக தூரத்திலிருந்து தண்ணீரை எடுத்து வருவதாலும், வாடிக்கையாளர்களிடம் அதிக பணம் வசூலிக்க வேண்டியுள்ளது என்கின்றனர் லாரி உரிமையாளர்கள்.
காத்திருக்கும் பொதுமக்கள்
இதனிடையே லாரி தண்ணீர் வேண்டி பதிவு செய்பவர்களுக்கு பல நாட்களுக்கு பிறகே குடிநீர் கிடைப்பதாக பொது மக்கள் கூறுகின்றனர். குடியிருப்பு பகுதிகளில் பதிவு செய்து நான்கு நாட்கள் கழித்துதான் தண்ணீர் கிடைக் கிறது. ஆழ்துளை கிணறுகளில் கிடைக்கும் நீர் அரை நாளுக்கு கூட வருவதில்லை என்பது சைதாப்பேட்டைவாசிகளின் கவலையாகும்.
வீணாகும் குடிநீர்
தண்ணீர் தட்டுப்பாடு ஒருபுறம் இருக்க சென்னை - மதுரவாயல் புறவழிச்சாலையில், இரும்புலியூர் அருகே பள்ளம் தோண்டும்போது, கிழக்கு தாம்பரம் பகுதிக்கு செல்லும் பாலாறு குடிநீர் ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டது. குடிநீர் சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை சீரமைக்க பலமணிநேரம் ஆனதால் பலஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகிப்போனது.
சீரான விநியோகம் எப்போது
சென்னையில் ஒருபுறம் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் நிலையில் மறுபுறம் தினசரி தண்ணீர் விநியோகம் நடைபெறுகிறது. குடிநீர் பஞ்சத்தைக் கருத்தில் கொண்டு அனைத்து பகுதிகளிலும் சீரான அளவில் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்பது சென்னைவாசிகளின் வலியுறுத்தலாகும்.
ரயில் நீர் வருமோ?
சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டினை போக்க ஈரோடு மாவட்டங்களில் இருந்து ரயில் மூலம் குடிநீர் கொண்டுவரப்படும் என்று அரசு அறிவித்தது. ஆனால் அதற்காக நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனவா என்பது பற்றியும் சென்னைவாசிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.