மான் வேட்டை வழக்கில் ஜாமீன் வேண்டுமா? வாலிபருக்கு மேட்டுப்பாளையம் நீதிமன்றம் வழங்கிய நூதன தண்டனை
மான் வேட்டையாடிய வாலிபருக்கு நிபந்தனை ஜாமீனில் மேட்டுப்பாளையம் நீதிமன்றம் நூதன தண்டனை அளித்துள்ளது.
மேட்டுப்பாளையம்: மான் வேட்டையாடிய வழக்கில் தொடர்புடைய வாலிபருக்கு நிபந்தனை ஜாமீனில் மேட்டுப்பாளையம் நீதிமன்றம் நூதன தண்டனை அளித்துள்ளது.
கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்த செல்வராஜ், கடந்த பிப்ரவரி மாதம் 20-ந் தேதி மானை வேட்டையாடி அதன் இறைச்சியை தனது இரு சக்கர வாகனத்தில், எடுத்துக்கொண்டு சென்றுள்ளார்.
அந்த நேரத்தில் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்து செல்வராஜின் இரு சக்கர வாகனத்தை போலீசார் சோதனையிட்டதில் மான் இறைச்சி வைத்துள்ளது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து செல்வராஜை போலீசார் கைது செய்து , மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் செல்வராஜை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி சுரேஷ் குமார் உத்தரவிட்டார். அதன்பின் கோவை மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் செல்வராஜ் சார்பாக ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை நீதிபதி சுரேஷ் விசாரித்தார். அப்போது மேட்டுப்பாளையம் வனச்சரகத்துக்குட்பட்ட வனப்பகுதியில் விலங்குகளுக்காக வைக்கப்பட்ட தொட்டியில் வனத்துறையினர் மேற்பார்வையில் ஒரு மாதத்துக்கு செல்வராஜ் தண்ணீர் நிரப்ப வேண்டும் என்று உத்தரவிட்டு, நீதிபதி சுரேஷ்குமார் நிபந்தனை ஜாமீன் அளித்தார்.