தொடரும் வனக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் – மேலும் ஒரு மாணவர் மயக்கம்
உதகை: மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் நீடித்து வருகின்ற நிலையில் உண்ணாவிரதம் காரணமாக மேலும் ஒரு மாணவர் மயக்கம் அடைந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மாணவர்களின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நீடிக்கிறது.
கடந்த 23 நாட்களாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை முதல் அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கல்லூரியில் மொத்தம் உள்ள 213 மாணவர்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் 11 மாணவர்கள் மயக்கம் அடைந்தனர். இந்த நிலையில் நேற்று மேலும் ஒரு மாணவர் மயக்கம் அடைந்துள்ளார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த ஜனவரி 27 ஆம் தேதியில் இருந்து வனதுறை ரேஞ்சர் பணியிடங்களில் 100 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் வனதுறை பட்டதாரிகளுக்கு வனத்துறை அதிகாரி பதவிக்கு முக்கியத்துவம் அளிப்பது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.