காலையில் நேர்காணலுக்கு மதியம் வந்த தபால்... இடிந்து போன கோவைப் பெண்!
கோவையில் அரசுப்பணிக்காக காத்திருந்த இளம்பெண்ணிற்கு அந்த வாய்ப்பு கிடைத்தும் தபால் துறையின் அலட்சியத்தால் கைநழுவிப் போயுள்ளது.
மேட்டுப்பாளையம் : அரசுப்பணியில் சேர வேண்டும் என்று கஷ்டப்பட்டு படித்து தேர்வு எழுதிய கோவையைச் சேர்ந்த பெண்ணிற்கு நேர்காணல் கடிதத்தைத் தபால் துறையினர் தாமதமாக வழங்கியதால் அந்த வாய்ப்பு பறிபோயுள்ளது. இதனால் செய்வது தெரியாது அந்த இளம்பெண் இடிந்து போயுள்ளார்.
மேட்டுப்பாளையம் சாந்திநகரைச் சேர்ந்தவர் சோமசுந்தரம், இவர் இரு சக்கர வாகனத்தில் பாத்திரங்களை எடுத்துச் சென்று வியாபாரம் செய்து வருகிறார். இவரின் மகள் வித்யா பட்டப்படிப்பு முடித்துவிட்டு அரசுப் பணிக்காக காத்திருக்கிறார்.
அரசுப்பணியில் சேரும் லட்சியத்துடன் இருந்த வித்யா வறுமையிலும் கஷ்டப்பட்டு பட்டப்படிப்பை முடித்துள்ளார். நிலஅளவைத்துறையில் காலியாக உள்ள எழுத்தர் பணிக்கு வித்யா எழுத்துத்தேர்வு எழுதியுள்ளார்.
பிற்பகலில் வந்த அழைப்பு கடிதம்
இதில் தேர்வான நிலையில் நேர்காணலில் பங்கேற்குமாறு கடந்த 12ம் தேதி மேட்டுப்பாளையம் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வித்யாவிற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 16ம் தேதி காலை 10.30 மணியளவில் நேர்காணலில் பங்கேற்க வேண்டிய நிலையில், அழைப்புக் கடிதம் வித்யாவின் கையில் பிற்பகலில் தான் கிடைத்துள்ளது.
இடிந்துபோன இளம்பெண்
இதனைப் பார்த்து இடிந்து போன வித்யா செய்வது தெரியாமல் கதறி வருகிறார். வாய்ப்பு கிடைத்தும் தபால் துறையினரின் அலட்சியத்தால் தனது அரசுப் பணி பறிபோயுள்ளதாக வித்யா கண்ணீர் வடிக்கிறார்.
தபால்துறையின் அலட்சியம்
வித்யாவின் அழைப்பாணை கடந்த 14ம் தேதியே மேட்டுப்பாளையம் தபால் நிலையத்திற்கு வந்துள்ளது. ஆனால் வித்யாவிற்கு இந்த கடிதம் இரண்டரை நாட்கள் கழித்தே கொடுக்கப்பட்டுள்ளது, இத்தனைக்கும் தபால் நிலையம் அருகிலேயே தான் வித்யாவின் வீடு உள்ளது.
அதிகாரிகள் அலட்சிய பதில்
தாமதமாக கடிதத்தை வழங்கியது குறித்து தபால் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது அலட்சியமாக அதிகாரிகள் பதிலளித்தது வித்யாவை மேலும் சங்கடப்படுத்தியுள்ளது. தேவையெனில் புகார் எழுதிக் கொடுங்கள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சர்வசாதாரணமாக பதில் அளித்துள்ளனர் தபால் துறையினர்.
சோகத்தில் குடும்பத்தினர்
தபால் துறையினரில் அலட்சியத்தால் வறுமையில் வாடும் ஏழைக் குடும்பத்தை சேர்ந்த பட்டதாரி பெண்ணின் அரசுப் பணி பறிபோயுள்ளது. வித்யாவிற்கு கிடைத்த வாய்ப்பு கைநழுவிப் போயுள்ளதால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர்.