கடல் போல காட்சி தரும் மேட்டூர் அணை.. விநாடிக்கு 1.25 லட்சம் கன அடி நீர் வெளியேறுகிறது
மீண்டும் மேட்டூர் அணை நிரம்பியுள்ளது.
Recommended Video
மேட்டூர்: மேட்டூர் அணை அதன் முழுக் கொள்ளளவை மீண்டும் எட்டியுள்ளது. மழையின் தீவிரம், வெள்ளப்பெருக்கு, உயர்ந்துவிட்ட நீர்மட்டம் காரணமாக 2-வது முறையும் நிரம்பி உள்ளது.
அணை நிரம்பியுள்ளதைத் தொடர்ந்து அதை வேடிக்கை பார்க்க மக்கள் குவிந்து வருகின்றனர். ஆனால் பாதுகாப்பு கருதி போலீஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
அணை நிரம்பி வழிவதாலும் தொடர்ந்து பெருமளவில் நீர் அணைக்கு வருவதாலும், 12 காவிரிக் கரையோர மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென் மேற்குப் பருவ மழை
தென்மேற்கு பருவமழை கேரளாவிலும் கர்நாடகாவிலும் வெளுத்து கட்டி அந்த மாநிலங்களை வெள்ளக்காடாகவே மாற்றிவிட்டது. இதன் காரணமாக கர்நாடகாவில் உள்ள அணைகளில் நீர் நிரம்பியதால் உபரி நீர் திறக்கப்பட்டு, அதன்மூலம் மேட்டூர் அணை நிறைந்து வழிந்தது.
கர்நாடக அணை நிரம்பியது
அதன் காரணமாக பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் தமிழக விவசாயிகள் உச்சி குளிர்ந்து போனார்கள். தற்போது மீண்டும் அதே மாநிலங்களில் பேய் மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக அணைகள் நிரம்பியதால் அந்த அணைகளிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
1.25 லட்சம் கன அடி நீர்
அணைக்கு தற்போது விநாடிக்கு 1.35 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து 1.25 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. அணைக்கு தொடர்ந்து அபரிமிதமாக நீர் வரத்து உள்ளதால் வெள்ள அபாயம் விடப்பட்டுள்ளது.
ஆட்சியர் உத்தரவு
முழு கொள்ளளவை எட்டிய நிலையில் காவிரி பாயும் பகுதிகளான 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் ரோகினியும், காவிரியில் யாரும் இறங்கிட கூடாது என்று உத்தரவு போட்டுள்ளார். ஆனாலும் மேட்டூர் அணை நிரம்பி வழிவதை பார்ப்பதற்காக மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனை செல்போனில் மக்கள் படம் பிடித்து செல்கின்றனர்.