சாரை சாரையாக குவியும் மக்கள் கூட்டம்.. திருவிழாக்கோலம் பூண்டது மேட்டூர் அணை
கடல் போல காட்சியளிக்கும் மேட்டூர் அணையைக் கான வரும் மக்கள் கூட்டத்தால் மேட்டூ அணை திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.
மேட்டூர்: மேட்டூர் அணை நிரம்பியுள்ளதைக் காண சுற்றுவட்டார மக்கள் அணி அணியாக ஆயிரக் கணக்கில் வந்து பார்த்துச் செல்வதால் மேட்டூர் அணை திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்துவருவதால் கர்நாடகா அரசு கேஆர்எஸ் அணையிலிருந்து தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டு வருகிறது. இதனால், தமிழகத்தில் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதைத் தொடர்ந்து, மேட்டூர் அணைக்கு வரும் உபரி நீரை வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி தண்ணீரை காவிரியில் பாசனத்துக்காக திறந்துவிடப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர் வந்துகொண்டே இருக்கிறது.
இந்நிலையில் மேட்டூர் அணை ஐந்தாண்டுகளுக்குப் பிறகு நிரம்பியுள்ளது. இதனால், மேட்டூர் அணை கடல்போல காட்சி அளிக்கிறது. அதனால், மேட்டூர் அணை நிரம்பியுள்ளதைப் பார்க்க மேட்டூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும் மக்கள் கூட்டம் அணி அணியாக, குடும்பம் குடும்பமாக மேட்டூர் அணையை நோக்கி வருகை தருகின்றனர். இதனால், மேட்டூர் அணை திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.
மேட்டூர் அணையில் மக்கள் கூட்டம் ஆயிரக் கணக்கில் திரண்டதால் அணைப் பகுதியில் திண்பண்டக் கடைகள், சிறுவர்களுக்கான பொம்மைக் கடைகள், சிறு ரங்க ராட்டினங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இது அணையைக் காணவரும் சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறையினர், பொதுமக்கள் யாரும் அணையின் ஆபத்தான இடங்களில் செல்ல வேண்டாம் என எச்சரித்து வருகின்றனர். அப்போதும் சிலர் உணர்ச்சிவசப்பட்டு கரையோரம் சென்று செல்போனில் செல்ஃபி எடுத்து வருகின்றனர்.
கடல் போல காட்சி அளிக்கும் மேட்டூர் அணையைப் பார்க்கும் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று ஊடகங்களிடம் தெரிவித்து வருகின்றனர்.