கண்கொள்ளாக் காட்சி.. கரை புரண்டோடி வரும் காவிரி.. 120 அடியைத் தொட்டது மேட்டூர்!
மேட்டூர் அணை 5 ஆண்டுகளுக்கு பிறகு இன்று முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
Recommended Video
சேலம்: மேட்டூர் அணை 5 ஆண்டுகளுக்கு பிறகு இன்று முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின.இதனால் அந்த அணைகளில் இருந்து கடந்த வாரம் காவிரி ஆற்றில் வினாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்தது. பின்னர் இந்த நீர்வரத்து படிப்படியாக குறைந்தது.மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக கடந்த 17-ந் தேதி இரவு 9 மணிக்கு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது.
அணையில் நீர் திறப்பு
இதைத்தொடர்ந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக கடந்த 19ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தண்ணீர் திறந்துவிட்டார். அப்போது அணையின் நீர்மட்டம் 109 அடியாக இருந்தது.
நீர்வரத்து உயர்வு
அணையில் இருந்து நீர் மின் நிலைய மதகுகள் மூலம் வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில், நீர்வரத்து தண்ணீர் திறப்பை விட அதிகமாக இருந்ததால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.
நேற்று இரவு 118 அடி
நேற்று காலை 8 மணி நிலவரப்படி 116.98 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இரவு 8 மணி அளவில் 118 அடியாக உயர்ந்தது. இதனால், பாதுகாப்பு கருதி அணையில் இருந்து நேற்று இரவு 8 மணிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது.
நீர்திறப்பு அதிகரிப்பு
நீர் மின் நிலைய மதகுகள் மூலம் கூடுதலாக வினாடிக்கு 2,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதுதவிர 16 கண் பாலத்தில் உள்ள மதகுகள் வழியாக வினாடிக்கு 7,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
மொத்தம் 30,000 கனஅடி திறப்பு
அதாவது நேற்று கூடுதலாக 10 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. மொத்தத்தில் நேற்று இரவு 8 மணி முதல் அணையில் இருந்து வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு உள்ளது.இதுதவிர இரவு 10 மணி முதல் சேலம் கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய் பாசனத்துக்காக வினாடிக்கு 200 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
கர்நாடகா- நீர் திறப்பு அதிகரிப்பு
இந்நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 80, 000 கனஅடியாக அதிகரித்துள்ளது. கபினி அணையில் இருந்து 30000 கனஅடியாகவும், கேஎஸ்ஆர் அணையில் இருந்து 51038 கனஅடியாகவும் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
நிரம்பியது மேட்டூர் அணை
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிர்கரித்துள்ளதால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. மேலும் மேட்டூர் அணை 5 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தனது முழுகொள்ளளவை எட்டியுள்ளது. 39வது முறையாக முழுகொள்ளளவை எட்டியுள்ளது மேட்டூர் அணை என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களுக்கு எச்சரிக்கை
மேட்டூர் அணை இதற்கு முன் கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 4-ந் தேதி தனது முழு கொள்ளளவை எட்டியது. அதன்பிறகு தற்போது அணையின் நீர்மட்டம் தனது முழுகொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செல்பி எடுக்க தடை
அணைக்கு நீர்வரத்து 68,489 கனஅடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 92.53 டிஎம்சியாக உள்ளது. இதனிடையே மேட்டூர் அணையின் 16 கண் பாலம் பகுதியில் செல்பி எடுக்கவும் காவிரி ஆற்றின் கரையில் நின்று தண்ணீர் வரத்தை வேடிக்கை பார்ப்பதற்கு காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.
கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
அணையில் இருந்து 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் நாமக்கல் மாவட்டத்தில் காவிரி ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். குமாரபாளையம், பள்ளிபாளையம் மற்றும் ஆவாரங்காடு கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
வெள்ள அபாய எச்சரிக்கை
இதேபோல் தஞ்சை மாவட்ட ஆட்சியரும் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரித்துள்ளார். ஆற்றில் இறங்கி குளிப்பதையும் துணி துவைப்பதையும் மக்கள் தவிர்க்க வேண்டும் என தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.