மேட்டூர் அணையின் நீர்மட்டம் 78 அடியாக உயர்வு- டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பது எப்போது?
சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 78 அடியை எட்டியது. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்கு நீர் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு விவசயிகளிடையே எழுந்துள்ளது. ஆனால் அதிகாரிகள் வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் காவிரி டெல்டா பாசன தேவைக்காக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் கர்நாடக அணைகளில் இருந்து மொத்தம் 16 ஆயிரம் கனஅடி தண்ணீரை கர்நாடகம் காவிரி ஆற்றில் திறந்து விட்டுள்ளது. இந்த தண்ணீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லை வந்தடைந்தது. நேற்று முன்தினம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.
இந்தநிலையில் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் முழுமையாக ஒகேனக்கல்லுக்கு நேற்று அதிகாலை வந்து சேர்ந்தது. நேற்று காலை 9 மணி நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
ஒகேனேக்கல் அருவிகளில் வெள்ளம்
காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி, பிரதான மெயின் அருவி, ஐந்தருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளதால் பரிசல் இயக்க 3வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஒகேனக்கல்லுக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதல் போலீஸ் பாதுகாப்புக்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
மேட்டூர் அணை
கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல் வழியாக கடந்த 8ம் தேதி நள்ளிரவு மேட்டூர் அணைக்கு வந்தடைந்தது. அணைக்கு நேற்றுமுன்தினம் வினாடிக்கு 7 ஆயிரத்து 905 கனஅடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து அன்று மாலை வினாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் ஒன்றரை அடி உயர்ந்தது.
அணை நீர்மட்டம் உயர்வு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்தை பிலிகுண்டுவில் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். நேற்றுமுன்தினம் 76.74 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலையில் 78 அடியாக உயர்ந்தது. அணைக்கு நீர்வரத்து நேற்று காலையில் 15 ஆயிரத்து 70 கனஅடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1,250 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. தற்போதைய நிலையில் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நாள் ஒன்றுக்கு ஒரு அடி
உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி தொடர்ந்து 15 ஆயிரம் கனஅடி நீர் அணைக்கு வரும் பட்சத்தில் நீர்மட்டம் சராசரியாக நாள் ஒன்றுக்கு 1 அடி வீதம் உயர வாய்ப்பு உள்ளது. இவ்வாறு கணக்கிட்டு பார்க்கும் போது, அணையின் நீர்மட்டம் 10 நாட்களுக்கு பிறகு சுமார் 86 அடியை எட்டும் வாய்ப்பு இருக்கிறது.
பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு எப்போது?
இந்தநிலையில் தமிழகத்தில் பருவமழை தீவிரம் அடையுமானால் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு விரைவில் தண்ணீர் திறக்க வாய்ப்பு ஏற்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். மேட்டூர் அணை நீர் இருப்பு குறைவாக இருந்ததால், நடப்பாண்டு ஜூன், 12ம் தேதி சாகுபடிக்கு நீர் திறக்கவில்லை. இதனால், டெல்டா மாவட்டங்களில், இரண்டு லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி பாதித்தது.
சம்பா சாகுபடி
இந்நிலையில், 13.10 லட்சம் ஏக்கரில், சம்பா சாகுபடியை துவங்க, மேட்டூர் அணையில் நீர் திறக்க வேண்டும் என, டெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஆண்டு டெல்டா சாகுபடிக்கு, ஆகஸ்ட் 9ல் நீர் திறக்கப்பட்டது. அதற்கேற்ப வடகிழக்கு பருவ மழையும் கைகொடுத்ததால், டெல்டாவில் சம்பா சாகுபடிக்கு தடையின்றி நீர் திறக்கப்பட்டது. நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் நீர் திறக்காத நிலையில், சம்பா சாகுபடி பணிகளை துவக்க, மேட்டூர் அணையை திறக்க வேண்டும் என, டெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தண்ணீர் பற்றாக்குறை அபாயம்
நடப்பாண்டு சம்பா சாகுபடிக்கு, தாமதமாக செப்டம்பரில் நீர் திறந்தாலும் கூட, குறைந்த பட்சம், 80 டி.எம்.சி தண்ணீர் தேவை. தற்போது அணைல், 40 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே உள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, கர்நாடகா நீர் வழங்கினால், மேட்டூர் அணை நீர் இருப்பு, 50 டி.எம்.சியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த நீரை தற்போது சம்பா சாகுபடிக்கு திறந்தால், நெற்பயிர்கள் முதிர்ச்சிக்கு வரும் காலகட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு, விவசாயிகளுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.
வடகிழக்கு பருவமழை
வடகிழக்கு பருவ மழை சீசன் துவங்கி, டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் பட்சத்தில், இருப்பு நீரை சிக்கனமாக திறந்து விட்டு, சம்பா சாகுபடிக்கு முழுமையாக நீர் வழங்கலாம். இதனால், சம்பா சாகுபடிக்கு, மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பதற்காக, வடகிழக்கு பருவ மழையை எதிர்பார்த்து, அதிகாரிகள் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நன்றாக கை கொடுத்தது. நீர் நிலைகள் நிரம்பின. இந்த ஆண்டும் வடகிழக்கு பருவமழை கை கொடுக்குமா என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாகும்.