ஒரே ஆண்டில் மூன்றாவது முறையாக முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை
மேட்டூர் அணை ஒரே ஆண்டில் மூன்றாவது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
சேலம்: மேட்டூர் அணை ஒரே ஆண்டில் மூன்றாவது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
கர்நாடகா மற்றும் கேரளாவில் தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால் கனமழை பெய்தது.
இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
அணைகள் வேகமாக நிரம்பியதால் அவற்றில் இருந்து 2 லட்சம் கன அடிக்கும் அதிகமாக உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டது.
கரையோரங்களில் புகுந்த வெள்ளம்
இதனால் காவிரி ஆற்றில் பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோர கிராமங்களில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதேபோல் கொள்ளிடம் ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
நீர்வரத்து குறைவு
இந்நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் அந்த அணைகளுக்கு நீர்வரத்தும் குறைந்தது. இதனால் அந்த அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டு உள்ளது.
மேட்டூர் அணைக்கு
2 அணைகளில் இருந்தும் நேற்று காலை தண்ணீர் திறப்பு 97 ஆயிரத்து 858 கன அடியாக குறைக்கப்பட்டது. ஒகேனக்கல்லுக்கு வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது.
3வது முறையாக முழு கொள்ளளவு
மேட்டூர் அணைக்கு நேற்று காலை தண்ணீர் திறப்பு 50 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. எனினும், நீர்வரத்து தொடர்ந்து 80 ஆயிரம் கன அடியாக இருந்ததால் மேட்டூர் அணை மீண்டும் முழு கொள்ளளவை எட்டியது. இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
நீர் திறப்பு குறைப்பு
இந்நிலையில் இன்று காலை கர்நாடக அணைகளில் நீர்திறப்பு விநாடிக்கு 37,000 கனஅடியில் இருந்து 20,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. கபினியில் இருந்து விநாடிக்கு 20,000 கனஅடி நீர் திறக்கப்படும் நிலையில், கேஆர்எஸ் அணையில் நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
45 வது நாளாக தடை
இதனிடையே தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 1 லட்சம் கனஅடியில் இருந்து 70,000 கனஅடியாக குறைந்துள்ளது. ஒகேனக்கலில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க, பரிசல்களை இயக்க 45வது நாளாக தடை நீடிக்கிறது.