மேட்டூர் அணையின் நீர்மட்டம் 69 அடியாக உயர்வு - காவிரி டெல்டாவிற்கு நீர் திறப்பு எப்போது
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 69.05 அடியை எட்டி உள்ளது. காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் எப்போது திறக்கப்படும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.
சேலம்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 22 ஆயிரத்து 700 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 69 அடியாக உயர்ந்துள்ளது.
வளிமண்டலத்தின் மேலடுக்குச் சுழற்சியின் காரணமாகப் பெய்த மழையாலும், தீவிரமடைந்துவரும் தென்மேற்குப் பருவமழையாலும் கர்நாடகா பகுதி அணைகளில் நீர் நிரம்பிக் காணப்படுகிறது.
இதையடுத்து, கர்நாடகாவின் கபினி மற்றும் கிருஷ்ணசாகர் அணையிலிருந்து அதிகப்படியான உபரிநீர் திறந்துவிடப்படுவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துவருகிறது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 22 ஆயிரத்து 700 கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் கர்நாடகாவின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்திருக்கிறது.
ஒகேனேக்கலில் வெள்ளம்
கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழைக் காரணமாக காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது . ஐந்தருவிகள் மற்றும் மற்ற அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது. தண்ணீர் வரத்து அதிகம் இருப்பதால், 7வது நாளாக ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் வந்து செல்கின்றனர்.
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மீண்டும் அதிகரித்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு 12,703 கனஅடியில் இருந்து 14,751 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 69.05 அடியை எட்டி உள்ளது. மேட்டூர் அணையின் முழு கொள்ளளவு 120 அடியாகும்.
நீரில் மூழ்கும் நந்தி சிலை
அணைக்கு தொடர்ந்து நீர் வந்து கொண்டிருக்கிறது. அதனால், பண்ணவாடி நீர்த்தேக்கப் பகுதியில் உள்ள நந்தி சிலையும் கிறிஸ்துவ கோபுரம் அதன் சாளரம் வரையும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தால், இன்னும் இரண்டு நாட்களில் நந்தி சிலை முழுமையாக தண்ணீரில் மூழ்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காவிரி டெல்டா பாசனம்
இந்நிலையில், 13.10 லட்சம் ஏக்கரில், சம்பா சாகுபடியை துவங்க, மேட்டூர் அணையில் நீர் திறக்க வேண்டும் என, டெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2015ஆம் ஆண்டு டெல்டா சாகுபடிக்கு, ஆகஸ்ட் 9ல் நீர் திறக்கப்பட்டது. அதற்கேற்ப வடகிழக்கு பருவ மழையும் கைகொடுத்ததால், டெல்டாவில் சம்பா சாகுபடிக்கு தடையின்றி நீர் திறக்கப்பட்டது.
வல்லுநர்கள் குழு
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தண்ணீர் திறக்கப்பட்டது. நடப்பாண்டு சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையை, அக்டோபர் இறுதி வாரத்தில் திறக்கலாம்' என, தஞ்சாவூர் மூத்த வேளாண் வல்லுனர்கள், அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
விவசாயிகள் கோரிக்கை
மேட்டூர் அணையை அரசு தற்போது திறப்பது சிறந்ததாக இருக்காது. தற்போது, அணைக்கு வரும் நீரை சேமித்து, பயிரின் முக்கிய பருவத்தில் தேவைப்படும் காலத்தில் திறப்பது நல்லது. மேலும், அக்டோபர் இறுதி வாரம் என்பது தான் சிறந்தது என்பதை அரசு நினைவில் வைத்து கையாள வேண்டும் என்று வல்லுனர்கள் பரிந்துரைத்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து விரைவில் தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாகும்.