நீர் இல்லை.. குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை ஜூன் 12ல் திறக்க இயலாது: ஜெ.
சென்னை: மேட்டூர் அணையில் போதிய அளவு நீர் இருப்பு இல்லாத காரணத்தால் டெல்டா மாவட்டங்களுக்கு குறுவை சாகுபடிக்காக திட்டமிட்டபடி இந்த ஆண்டு ஜூன் 12ந் தேதி தண்ணீர் திறக்க இயலாது என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
மேட்டூர் அணை நீர் மூலம் காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஆண்டுதோறும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியாக இருக்கும்பட்சத்தில் பருவமழையை நம்பி ஜூன் 12ம் தேதி காவிரி டெல்டா பாசனப் பகுதிக்கு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும்.
ஜூன் 12ம் தேதி முதல் ஜனவரி 28ம் தேதி வரை குறுவை, சம்பா, தாளடி பயிர்கள் சாகுபடிக்காக 330 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும். பாசனப் பகுதிகளில் பெய்யும் மழையைப் பொறுத்து பாசனத்துக்கான தண்ணீர் தேவை குறையும்.
இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கையில், குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை ஜூன் 12ம் தேதி திறந்துவிட இயலாது என்று கூறியுள்ளார்.
120 அடி உயர மேட்டூர் அணையில் தற்போதைய நீர்மட்டம் 45.82 அடி மட்டுமே நீர் உள்ளது. அதாவது 15.281 டி.எம்.சி நீர் மட்டுமே இருப்பில் உள்ளது. ஆனால் நீர்மட்டம் 90 அடியாக இருந்தல் மட்டுமே குறுவை சாகுபடிக்கு நீர் திறந்து விட முடியும் என ஜெயலலிதா விளக்கமளித்துள்ளார்.
காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் குறுவை, சம்பா ஆகிய இருபோக நெல் சாகுபடி நடந்து வருகிறது. இரு போகத்திலும் சேர்த்து 16 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி நடைபெறும். இதற்காக மேட்டூர் அணையில் இருந்து வழக்கம் போல ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட வேண்டுமானால் அணையில் குறைந்தபட்சம் 90 அடி தண்ணீர் இருக்க வேண்டும்.
கடந்த 4 ஆண்டுகளாக குறுவைக்கு தண்ணீர் திறக்கப்படாததால் பம்ப்செட் வசதி உள்ள விவசாயிகள் மட்டுமே குறுவை சாகுபடி செய்தனர். இவர்களை ஊக்குவிக்க அரசு குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டங்களை அறிவித்தது.
இதன்படி குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகள் தண்ணீரை வயல்களுக்கு கொண்டு செல்ல இலவசமாக குழாய்கள் மற்றும் விதை நெல், உரம் மானியம் வழங்கியது. நடவு மற்றும் களை எடுக்கும் இயந்திரங்களை இலவசமாக பயன்படுத்தும் வசதி உள்பட பல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
5ம் ஆண்டாக இந்த ஆண்டும் டெல்டாவில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த ஆண்டும் விவசாயிகளை ஊக்குவிக்க அரசு குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டங்களை அறிவித்துள்ளார் ஜெயலலிதா.