சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து நாளை தண்ணீர் திறப்பு
சேலம்: சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து நாளை ஞாயிற்றுக்கிழமை தண்ணீர் திறக்கப்படுகிறது.
மேட்டூர் அணை மூலம் காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள 12 மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி முதல், ஜனவரி 28ம் தேதி வரை காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடுவது வழக்கம்.
குறுவை, சம்பா, தாளடிப் பயிர்களுக்கு 330 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும். பாசனப் பகுதிகளில் மழை பெய்தால் பாசனத்துக்கான நீர்த் தேவை குறையும். நடப்பாண்டில் ஜூன் 12இல் மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்துவிடப்படவில்லை.
ஆகஸ்ட் 9ல் திறப்பு
சம்பா சாகுபடிக்கு ஆகஸ்ட் 9ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என முதல்வர் ஜெயலலதா அறிவித்தார். அதன்படி, ஞாயிறன்று அணை திறக்கப்பட உள்ளது.
56வது ஆண்டாக தாமதம்
இதுவரை 55 ஆண்டுகள் மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் தாமதமாகவே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது 56ஆவது ஆண்டாக ஞாயிற்றுக்கிழமை மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக தாமதமாக தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
12 லட்சம் ஏக்கர்
ஆகஸ்ட் 9ஆம் தேதி தொடங்கி, ஜனவரி 28ஆம் தேதி வரை தண்ணீர் திறந்துவிடப்படும். இந்த தண்ணீரைக் கொண்டு காவிரி டெல்டா மாவட்டங்களில் 12 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
அணையின் நீர்மட்டம்
இந்த நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 96.48 அடியாக இருந்தது. அணைக்கு நொடிக்கு 2,833 கன அடி வீதம் தணணீர் வந்துகொண்டிருந்தது. குடிநீர்த் தேவைக்காக நொடிக்கு 2,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 60.37 டி.எம்.சி.யாக இருந்தது.