குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ல் மேட்டூர் அணை திறப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமி
குறுவை சாகுபடிக்காக இந்த ஆண்டு ஜூன் 12ல் மேட்டூர் அணை திறப்பு இல்லை என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை : குறுவை சாகுபடிக்காக இந்த ஆண்டு ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்க வாய்ப்பு இல்லை என்று சட்டசபையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் இன்று கைத்தறி மற்றும் துணிநூல் / கதர், கிராமத்தொழில்கள் மற்றும் கைவினைப்பொருட்கள் துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது.
இதில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் விவசாயத்திற்கு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், மானிய விலையில் விதைகள் மற்றும் மும்முனை மின்சாரம் வழங்குவது தொடர்பான 70 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் இடம் பெற்றுள்ளது.
மேலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு முழுமையான அழுத்தம் தரப்படும் என்றும், குறுவை சாகுபடிக்கான புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுவதாகவும் அறிவித்தார்.
மேலும், காவிரி டெல்டாவில் குறுவை சாகுபடிக்காக வழக்கமாக ஜூன் 12ம் தேதி திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை, இந்த ஆண்டு போதிய தண்ணீர் இல்லாததால் திறக்கப்படாது என்றும் தெரிவித்தார்.
முதல்வர் இந்த முடிவால் காவிரி டெல்டா விவசாயிகள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே, தண்ணீர் இல்லாமல் விவசாயம் பாதிக்கப்பட்டும் இருக்கும் நிலையில் அரசின் இந்த அறிவிப்பு தங்களை கவலையில் ஆழ்த்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.