எம்.ஜி.ஆரின் 99வது பிறந்த நாள்... சிலைக்கு மாலை போட்டு, ஸ்வீட் கொடுத்து கொண்டாடுங்கள் -ஜெ.
சென்னை: அதிமுக நிறுவனரும் தமிழக முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை 17ம் தேதி தொடங்கி 3 நாட்கள் கொண்டாட வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா அதிமுகவினருக்கு உத்தரவிட்டுள்ளதார்.
இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
அ.தி.மு.க. நிறுவனத் தலைவர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 99ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, 17ம்தேதி முதல் 19ம்தேதி வரை மூன்று நாட்கள் ‘புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 99ஆவது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டங்கள்' கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் ஒன்றியங்கள், நகரங்கள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும்; கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன. அதிமுக சட்டசபை உறுப்பினர்கள் ஆங்காங்கே நடைபெற உள்ள பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவார்கள்.
மாவட்ட செயலாளர்களும், மாவட்ட நிர்வாகிகளும், தங்கள் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற் சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளுடனும் இணைந்து சிறப்புப் பேச்சாளர்கள் மற்றும் கலைக் குழுவினருடன் தொடர்பு கொண்டு பொதுக் கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி வேண்டும்.