இதுதான் தீபா வெளியிட்ட எம்ஜிஆர் அம்மா தீபா பேரவைக் கொடி
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா பேரவை தொடங்கி அதன் கொடியை வெளியிட்டுள்ளார். அந்தக் கொடி ஏற்கனவே உள்ள அதிமுக கொடி போன்றே உள்ளது.
சென்னை: அதிமுக கொடி போன்றே ஒரு கொடியை தயார் செய்து எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் கொடி இதுதான் என்று தீபா இன்று செய்தியாளர்களிடம் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
திமுகவில் இருந்து எம்ஜிஆர் பிரிந்து அதிமுகவை உருவாக்கியதன் அடையாளமாக திமுகவின் கருப்பு சிவப்பு நிறக் கொடியின் இடையில் வெள்ளை நிறத்தை சேர்த்து அதிமுகவின் கொடியை எம்ஜிஆர் உருவாக்கினார்.
ஜெயலலிதா இறப்பிற்கு பின்னர் அரசியலில் குதித்துள்ள தீபா அவரது கட்சியை அதிமுக கொடியைப் போன்றே வேறுபாடுகள் இன்றி உருவாக்கி அறிமுகம் செய்துள்ளார்.
அந்தக் கொடியில் திமுக கொடியின் அடையாளமான கருப்பு நிறம் மேல் புறமும், சிவப்பு நிறம் கீழேயும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் நடுவில் தீபாவின் அத்தையான ஜெயலலிதாவிடம் எம்ஜிஆர் செங்கோல் கொடுக்கும் படத்தை வட்ட வடிவத்தில் வைக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவிற்கு எம்ஜிஆர் செங்கோல் கொடுக்கும் படம் பிரசித்தி பெற்றது. எல்லா போஸ்டர்களிலும் இடம் பெற்று மக்கள் மனத்தில் பதிந்து போன படம் இது. இதைத்தான் தற்போது கொடியின் மையப் பகுதியில் தீபா வைத்துள்ளார்.
இது எந்த அளவிற்கு எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையையும், அதிமுகவின் கொடியையும் பிரித்து காட்டும் என்பது தெரியவில்லை.