எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை பெயர் திடீர் மாற்றம்.. தீபா பரபரப்பு பேட்டி!
எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை பெயர் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை: எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை, தற்பொழுது அதிமுக ஜெ.தீபா அணி என பெயர் மாற்றம் செய்யப்படுவதாக ஜெ.தீபா கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா நேற்று மாலை சென்னை தி.நகரில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். நேரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. என் மீது திட்டமிட்டு சிலரால் அவதூறு பரப்பப்படுகிறது.
அதிமுகவுக்கு உரிமை கோருவது தொடர்பாக தேர்தல் ஆணையம் எங்களுக்கு திங்கட்கிழமை வரை அவகாசம் வழங்கியுள்ளது. அதிமுக தற்போது தலைமை இல்லாமல் சிதறிக் கிடக்கிறது. கட்சிக்கு தொண்டர்களின் பலம் அவசியம், எங்களிடம் தொண்டர்கள் பலம் உள்ளது. சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களிடம் இருக்கலாம். ஆனால் தொண்டர்களின் பலம் எங்களிடம் தான் உள்ளது.
போயஸ் கார்டன் இல்லத்தை சட்டப்படி மீட்பதற்கான நடவடிக்கைகள் நடந்து வருகிறது. எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை தற்பொழுது அதிமுக ஜெ.தீபா அணி என பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. இவ்வாறு ஜெ.தீபா கூறினார்.