தீபா பேரவைக்குள் கலகம்.. விலகும் தொண்டர்கள்.. ஒரேநாளில் 300 பேர் ஓபிஎஸ் அணிக்கு தாவல்!
தீபாவின் எம்ஜிஆர் அம்மா பேரவையில் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அவரது தொண்டர்கள் அந்த அமைப்பில் இருந்து விலகி வருகின்றனர்.
சென்னை: தீபாவின் எம்ஜிஆர் அம்மா பேரவையில் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அவரது தொண்டர்கள் அந்த அமைப்பில் இருந்து விலகி வருகின்றனர். நேற்று ஒரேநாளில் மட்டும் ஆர்கே.நகர் தொகுதியைச் சேர்ந்த 300 தொண்டர்கள் தீபாவின் பேரவையில் இருந்து விலகி ஓபிஎஸ் அணையில் இணைந்துள்ளனர்.
ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக இரண்டாக உடைந்து சசிகலா, ஓபிஎஸ் அணி என்று பிரிந்துவிட்டது. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் தனி அணி தொடங்கி விட்டார். இதில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற பெயரில் தனியாக செயல்பட்டு வருகிறார்.
சசிகலா குடும்பத்தினருக்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுகவினர் தீபாவுக்கு ஆதரவு தெரிவித்து அவரது அணியில் சேர்ந்தனர். நடைபெறவுள்ள ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் அவரே தனித்துப் போட்டியிட போவதாகவும் அறிவித்துள்ளார்.
பேரவையில் ஏற்பட்ட பிளவு
ஓபிஎஸ் உடன் இணைந்து அதிமுகவின் இருகரங்களாக செயல்படுவோம் என அறிவித்த தீபா தனியாக தேர்தலை சந்திக்கப் போவதாக அறிவித்தது ஓபிஎஸ் தரப்பை அதிருப்தியடைய செய்தது. இந்நிலையில், தீபாவுக்கும் அவரின் கணவர் மாதவனுக்கும் பேரவையில் நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
விலகிய மாதவன்
இதனால் பேரவையில் பிளவு ஏற்பட்டது. இதனால் மாதவன் தீபாவின் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
படிப்பயாக விலகும் தொண்டர்கள்
தீபாவின் பேரவைக்குள் ஏற்பட்ட குழப்பம் காரணமாக அவருக்கு ஆதரவு தெரிவித்து தொண்டர்கள் படிப்படியாக விலகி வருகின்றனர். அவர்கள் ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்து அவரது அணியில் இணைந்து வருகின்றனர்.
ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு
இந்நிலையில், நேற்று ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட 42வது வார்டு, பகுதியை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட தீபா ஆதரவாளர்கள் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனனர். அவர்கள் ஆர்.கே.நகர் இடைதேர்தலில் போட்டியிடும் ஓபிஎஸ் அணியின் வேட்பாளர் மதுசூதனனை சந்தித்து அணியில் இணைந்தனர்.