திருச்சியில் வைக்கப்பட்ட பேனர்களை நாளைக்குள் தூக்கனும்.. ஹைகோர்ட் அதிரடி!
திருச்சியில் வைக்கப்பட்டிருக்கும் பேனர்களை நாளைக்குள் அகற்ற உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: திருச்சியில் வைக்கப்பட்டிருக்கும் பேனர்களை நாளைக்குள் அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 30-ஆம் தேதி அதுகுறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தமிழகத்தில் சாதாரணமாகவே அரசியல் பொதுக் கூட்டம், பிறந்த நாள், உள்ளிட்டவைகளுக்காக பேனர்கள் வைக்கப்படும். தற்போது எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ஆங்காங்கே இரு ஆள் உயர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
இதனால் சாலை மறைக்கப்பட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அரும்பாக்கத்தைச் சேர்ந்த பெண் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிமன்றம் உயிரோடு இருப்பவர்களின் புகைப்படங்கள் அடங்கிய பேனர்களை வைக்க தடை விதித்தது.
இதையும் மீறி திருச்சி மற்றும் பெரியகுளத்தில் ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. திருச்சியில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்ற டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி பேனர் கலாசாரத்துக்கு அதிருப்தி தெரிவித்தார்.
திருச்சியில் எத்தனை பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழக அரசின் விளக்கத்தை உயர்நீதிமன்றம் கேட்டது. அதற்கு திருச்சி எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு அனுமதி பெற்றே 220 பேனர்கள் வைத்துள்ளோம் என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இந்நிலையில் நீதிபதி, அதிகளவில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதால் சட்டத்திற்கு சட்டத்திற்கு உள்பட்டு அனுமதி வழங்கவில்லை என தெரிகிறது.பேனர் விவகாரத்தில் வழக்கு மேல் வழக்கு போட்டும் உத்தரவுக்கு மேல் உத்தரவு போட்டும் எந்த பயனுமில்லை.
விதிகளை மீறி வைத்துள்ள பேனர்கள் மீது இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறிய நீதிபதி நாளைக்குள் திருச்சியில் வைக்கப்பட்டுள்ள பேனர்களை வைக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் பேனர் அகற்றியது குறித்த அறிக்கையை வரும் 30-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.