இதெல்லாம் நிஜமாவே நடக்க போகுதா.. இல்லாவிட்டால் சும்மானாச்சுக்கும் அழைப்பா??
ஒரே மேடையில் 4 தலைவர்கள் கலந்து கொள்வார்களா?
Recommended Video
சென்னை: வரும் 30- ஆம் தேதி நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் முதல்வர், துணை முதல்வருடன், டிடிவி தினகரன், மு.க.ஸ்டாலின் ஆகியோரும் கலந்து கொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தகவல் இல்லை.. அழைப்பிதழே ரெடியாகி விட்டது.
ஒரே மேடையில் 4 தலைவர்களா? இதை மேலோட்டமாக பார்த்தால், அரசியல் நாகரீகம் என்று எடுத்து கொள்ளலாம். எப்படி கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்தியபோது பாஜக தலைவர்கள் பங்கேற்றார்களோ அதுபோல வேண்டுமானால் இதையும் பார்க்கலாம். அப்படி இல்லாமல் சற்று ஆழமாக பார்த்தால், 2 விஷயம் புலப்படுகிறது. எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் வேண்டுமானால் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்திருக்கலாம். அதில் ஒன்றும் தவறில்லை.
ஸ்டாலின் பங்கேற்பாரா?
ஆனால் ஸ்டாலின் இதில் பங்கேற்பாரா என தெரியவில்லை. ஏனெனில் "பொய் பேசுவதில் ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம் தரலாம்" என்று முதல்வரும், "ஊழல் புரிவதில் முதலமைச்சருக்குத்தான் தேசிய விருது தர வேண்டும்" என்று ஸ்டாலினும் போட்டி போட்டுக் கொண்டு தாக்கி வருகிறார்கள். வேண்டுமானால் அரசியல் நாகரீகம் கருதி ஸ்டாலின் கலந்து கொள்ளவோ அல்லது தன் சார்பாக அல்லது கட்சி சார்பாக வேறு யாரையேனும் முக்கிய பிரமுகரையோ அனுப்பி வைக்கலாம். எனவே இந்த திமுக இந்த விழாவில் பங்கேற்பதை கூட பெரிதாக நினைக்க முடியவில்லை.
திணறடித்த தினகரன்
ஆனால் டிடிவி தினகரன் பெயர் அழைப்பிதழில் உள்ளதுதான் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. அதிமுகவும் அமமுகவும் கடந்த 2 வருடங்களாகவே சொற்போரில் ஈடுபட்டு வருகின்றனர். என்ன ஒரு ஆச்சரியம் என்றால், அதிமுக தலைவர்கள், அமைச்சர்களின் பேச்சுக்கு எல்லாம் தனி ஒருவராகவே டிடிவி தினகரன் பதிலளித்து சமாளித்து வந்ததுதான். ஆளும் தரப்பில் அத்தனை பேருக்கும் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு ஈடுகட்டும் வகையில் பேசி வந்து கொண்டிருக்கிறார். அதிலும் அமைச்சர்களை தினகரன் தாக்கி பேசியதும், இழித்து பேசியதும்தான் அதிகம்.
எதற்காக அழைப்பிதழ்?
"ஜெயலலிதாவை சிறைக்கு அனுப்பியவர்", "ஜெயலலிதாவால் கட்சியை விட்டு விரட்டி அனுப்பப்பட்டவர்" என்று அதிமுகவும், "தமிழகத்தில் நடப்பது சசிகலா ஆட்சிதான்" என்று தினகரனும் வெளிப்படையாகவே பொளந்து கட்டி பேசி வருகிறார்கள். இந்நிலையில் இப்படி ஒரு அழைப்பிதழ் எதற்காகத்தான் என்று புரியவில்லை.
நடுநிலைமையா?
ஒருவேளை தினகரனுடன் சேர்ந்து செயல்படலாம் என்ற நிலைமைக்கு அதிமுகவினர் ஆளாகிவிட்டார்களா என தெரியவில்லை. அல்லது தினகரனை ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் எதிர்க்கவும் முடியாமல் நடுநிலைமையை வெளிக்காட்டி கொள்ள அதிமுக தரப்பு முயலுகிறதா என்றும் தெரியவில்லை. அல்லது இருக்கும் 3 ஆண்டு கால ஆட்சியில் தினகரனை தேவை இல்லாமல் பகைத்து கொள்ள வேண்டாம் என நினைக்கிறதா என்றும் தெரியவில்லை.
சர்வாதிகார ஆளுமை
அல்லது 3 ஆண்டு கால ஆட்சிக்கு பிறகு இந்த பிரம்மாண்டமான கட்சியை கட்டிக் காப்பாற்ற முடியாது என்ற பயம் வந்துவிட்டதா என்றும் தெரியவில்லை. அல்லது இப்படி ஒரு வேரூன்றி படர்ந்த கட்சியை தொடர்ந்து வழிநடத்தி செல்ல சசிகலா போன்ற சர்வாதிகார ஆளுமை தேவைப்படும் என்று அதிமுக தரப்பு நினைக்கிறதா என்றும் தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்!!
கண்கொள்ளா காட்சி
ஆனால் எதிரும் புதிருமாக உள்ள கட்சி தலைவர்கள் அரசியல் நாகரீகம் கருதி, இந்த விழாவில் கலந்து கொண்டால் அது உண்மையிலேயே கண்கொள்ளாக் காட்சிதான்!!