தினகரன் கோரிக்கை நிராகரிப்பு... மதுரையில் ஈபிஎஸ் தலைமையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கன ஜோர்
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா ஜூன் 30ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது.
சென்னை: எம்ஜிஆர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஜூன் 30ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது. டிடிவி தினகரன் தலைமையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட வேண்டும் என்று அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் கோரிக்கை வைத்த நிலையில் அதனை நிராகாரித்து விட்டது எடப்பாடி பழனிச்சாமி அணி.
மதுரை ரிங்ரோடு பாண்டிகோவில் அருகே எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அரசு சார்பில் வரும் 30ம் தேதி நடக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், தொண்டர்கள் பங்கேற்கின்றனர். இதற்கான பூமி பூஜை விழாவில் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, தங்கமணி, ஓ.எஸ்.மணியன், ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திரபாலாஜி, காமராஜ், கடம்பூர் ராஜூ, விஜயபாஸ்கர், பாஸ்கரன், ராஜலட்சுமி ஆகிய 12 அமைச்சர்கள் மற்றும் சில எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.
அமைச்சர்களுக்கு பரிவட்டம்
யாகசாலை பூஜை முடிந்தவுடன் அமைச்சர்களுக்கு பரிவட்டம் கட்டப்பட்டது. பின்பு அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் நூற்றாண்டு விழாவுக்கான முகூர்த்தகால் நட்டனர். டிடிவி தினகரனை முகூர்த்தக்கால் நடவே கூப்பிடாதவர்கள், விழாவிற்கு எப்படி அழைப்பார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
திண்டுக்கல் சீனிவாசன்
எம்ஜிஆர் நூற்றாண்டு துவக்க விழாவின்போது, 54,500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படுகிறது என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.
ஜனவரியில் நிறைவு விழா
மதுரையில் நடைபெறும் விழாவில் 5 லட்சம் பேர் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு சார்பில் நூற்றாண்டு விழா முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறும். கடைசியாக ஜனவரி மாதம் சென்னையில் நிறைவு விழா நடைபெறுகிறது என்று கூறியுள்ளார் திண்டுக்கல் சீனிவாசன்.
தினகரனை புறக்கணித்த ஈபிஎஸ்
தினகரன் தலைமையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற வேண்டும் என்பது அவரது ஆதரவு எம்எல்ஏக்களின் கோரிக்கை. இப்தார் நோன்பு திறப்பும் தினகரன் தலைமையில் நடைபெற வேண்டும் என்று எம்எல்ஏக்கள் வைத்த கோரிக்கையை நிராகரித்த அமைச்சர்கள் ஈபிஎஸ் தலைமையில் இப்தார் நோன்பு திறந்தனர். அதனை தினகரன் எம்எல்ஏக்கள் புறக்கணித்தனர்.
எம்எல்ஏக்கள் பங்கேற்பார்களா?
அதேபோல எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் என்று நமது எம்ஜிஆரில் முழு பக்க விளம்பரம் கொடுத்துள்ளனர். டிடிவி தினகரன் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது அவரது ஆதரவாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. டிடிவி தினகரனுக்காக எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை எம்எல்ஏக்கள் புறக்கணிப்பார்களா? தொகுதி மக்களும், தொண்டர்களும் இதனை ஏற்றுக்கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.