ஆர்கே நகரில் ஜெயலலிதா அண்ணன் மகள், எம்ஜிஆரின் பேரன்கள் மல்லுக்கட்டுகிறார்கள்?
ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் மற்றும் எம்ஜிஆரின் பேரன்கள் வேட்பாளர்களாக களமிறங்க கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை: ஆர்கே நகர் இடைத் தேர்தலில் மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் பேரன்களை வேட்பாளர்களாக களமிறக்கி வேடிக்கை பார்க்க அதிமுகவும் பாரதிய ஜனதாவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அவரது அண்ணன் மகள் தீபா, எம்ஜிஆரின் மனைவி ஜானகி அம்மாளின் அண்ணன் மகன் நடிகர் தீபன் ஆகியோர் சசிகலாவுக்கு எதிராக குரல் கொடுத்தார். இதற்காக மன்னார்குடி குடும்பம் ஒரு வியூகம் வகுத்தது.
எம்ஜிஆர் வளர்ப்பு மகள் சுதா
எம்ஜிஆரின் வளர்ப்பு மகளான சுதாவை தங்களுக்கு ஆதரவாக வளைத்தது. அத்துடன் எம்ஜிஆரின் ராமாவரம் தோட்டத்துக்கும் சென்று ஏற்கனவே நிறுவப்பட்டிருந்த எம்ஜிஆர் சிலையை சீரமைத்து திறந்து வைத்தார் சசிகலா.
பாஜகவில் லீலாவதி
அதே நேரத்தில் எம்ஜிஆருக்கு சிறுநீரகத்தை தானமாக கொடுத்த அண்ணன் மகள் லீலாவதியும் அவரது மகனும் பாஜகவில் இணைந்தனர். இதனிடையே ஆர்கே நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.
தீபா போட்டி
இத்தொகுதியில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா போட்டியிட வேண்டும் என அதிமுக தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
சசிகலா அச்சம்
இத்தொகுதியில் சசிகலா போட்டியிட்டால் மண்ணை கவ்வ வைக்க அதிமுக தொண்டர்கள் சபதமெடுத்துள்ளனர். ஆகையால் தீபா போட்டியிட்டால் எம்ஜிஆரின் பேரனான சுதாவின் மகன் ராமச்சந்திரனை அதிமுக வேட்பாளராக நிறுத்த சசிகலா தரப்பு திட்டமிட்டுள்ளதாம்.
இவர்கள் இருவரும் போட்டியிடும் போது தங்களது கட்சியில் இணைந்திருக்கும் எம்ஜிஆரின் அண்ணன் வழி பேரனான லீலாவதியின் மகன் பிரவீனை வேட்பாளராக களமிறக்க பாஜகவும் திட்டமிட்டுள்ளதாம்.
சபாஷ்! சரியான போட்டி!!