மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்.. ஆழ்வார்திருநகரியில் "கொலு" வீற்றிருக்கும் எம்.ஜி.ஆர்.!
ஆழ்வார்திருநகரி (தூத்துக்குடி): தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியில் ஒரு எம்.ஜி.ஆர் பக்தர் தனது வீட்டு கொலுவில் எம்.ஜி.ஆர். சிலையை வைத்து வழிபட்டு வருவது அப்பகுதியினரை ஈர்த்துள்ளது.
கொலுவீற்றிருக்கும் எம்.ஜி.ஆரைப் பார்க்க கூட்டம் அலை மோதுகிறதாம். பொதுமக்கள் பலரும் அதை வியப்புடன் பார்த்துச் செல்கின்றனராம்.
இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் நவராத்திரி விழா முக்கியமானதாகும். முப்பெரும் தேவியரை போற்றும் வகையில் புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி 10நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவானது நவராத்திரி விழா, தசரா திருவிழா, துர்கா பூஜை எனவெவ்வேறு பெயர்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
நவராத்திரி கொலு
நவராத்திரி விழாவினை ஒவ்வொருவரும் தங்களது வீடுகளில் கொலுவினை வைத்து கொண்டாடுகின்றனர். நவராத்திரி விழாவின், ஒன்பது நாட்களிலும் வீடுகளில் கொலு வைக்கும் நிகழ்ச்சி அரங்கேறும். கொலுமேடை படிகளை 5, 7, 9, 11 என்ற எண் வரிசையில் அமைத்து கொலு பொம்மைகளை அலங்கரிப்பார்கள்.
முதல் 3 நாட்கள்
முதல் 3 நாட்கள் துர்க்கையை வேண்டியும், அடுத்த 3நாட்கள் லட்சுமிதேவியை வேண்டியும், கடைசி 3நாட்கள் சரஸ்வதி தேவியை போற்றியும் கொலு வழிபாடு செய்யப்படுகிறது. நவராத்திரி நாட்களில் பெண்கள் வீடுகளில் கொலு வைத்து, விரதம் இருந்து, அம்மனை வழிபட்டால் சலகஐஸ்வர்யங்களுடன், நீண்டஆயுளும் கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.
கோலாகல நவராத்திரி விழா
இதன்படி நவராத்திரி விழாவினை முன்னிட்டு கொலு வைக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கிரிக்கெட் விளையாட்டு பிரபலமாக இருந்த நேரத்தில் விநாயகர் கிரிக்கெட் விளையாடுவது போன்ற சிற்பங்கள் கொலுவில் இடம் பிடித்தது.
ராஜப்பா வெங்கடாச்சாரி
இந்நிலையில், ஆழ்வார்திருநகரியை சேர்ந்த சூ டிராஜப்பா வெங்கடாச்சாரி என்பவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள நவராத்திரி கொலுவில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், தமிழ் திரையுலகின் சிறந்த நடிகருமான எம்.ஜி.ஆரின் சிலை வைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் அதிதீவிர ரசிகரான ராஜப்பா வெங்கடாச்சாரி தனது வீட்டிலுள்ள சாமி படங்களின் வரிசையில் எம்.ஜி.ஆர் படத்தையும் வைத்து வழிபட்டு வருகிறார்.
கொலு வீற்றிருக்கும் எம்.ஜி.ஆர்
இதேவரிசையில் தற்போது கொலு வழிபாட்டிலும் எம்.ஜி.ஆர்.சிலையை வைத்து வழிபட்டு வருகிறார். வித்தியாசமான இந்த கொலுவினை அப்பகுதியை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் வியப்புடன் வந்து பார்த்து வணங்கிச் செல்கின்றனர்.
எம்.ஜி.ஆர். அத்துப்படி
எம்.ஜி.ஆரின் அதிதீவிர ரசிகரான ராஜப்பா வெங்கடாச்சாரி ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் ஆவார். இவர் எம்.ஜி.ஆர் நடித்துள்ள 134 திரைப்படங்கள், அதில் நடித்த கதாநாயகிகள், படம் வெளிவந்த ஆண்டு, பாடல் எழுதியவர், இசை அமைப்பாளர், தயாரிப்பாளர் என அனைவரது பெயர் மற்றும் எம்.ஜி.ஆர் தொடர்பான அனைத்து தகவல்களையும் எப்போது கேட்டாலும் சொல்லும் திறன் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். தற்போது ஆழ்வார்திருநகரி சுற்றுவட்டாரப் பகுதி மக்களிடத்தில் இவரது வீட்டின் கொலு பெரும் வியப்பினை ஏற்படுத்தியுள்ளது.