எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தமிழகமெங்கும் உற்சாகக் கொண்டாட்டம் - சிறப்பு தபால் தலை வெளியீடு
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை ஒட்டி அவருக்கு சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர். சிறப்பு அஞ்சல் தலையை தலைமை அலுவலர் மூர்த்தி வெளியிட ஓ.பன்னீர் செல்வம் பெற்று கொண்டார்.
சென்னை: மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆரின் 100வது பிறந்தநாளை அதிமுக தொண்டர்கள் உள்பட பலரும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அவருடைய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு தபால்தலை, சிறப்பு நாணயம் வெளியிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை ஒட்டி, தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஆளும்கட்சியான அதிமுக ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இதற்காக தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது.
எம்ஜிஆரின் நூறாவது பிறந்தநாள் விழா என்பதால், இதனை சிறப்பாக கொண்டாட அக்கட்சித் தலைமை உத்தரவிட்டிருந்தது. அதன்படி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கழகத்தினர், கேக் வெட்டியும், பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்டங்களை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
அதேபோல், தமிழகம் முழுவதும் உள்ள எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கும், திருவுருவ படத்திற்கும் கழகத்தினர் மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர். அதிமுகவினர் மட்டும்மல்லாது திரை பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும், பொதுமக்களும் எம்ஜிஆரின் பிறந்தநாள் விழாவை மாநிலம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
எம்ஜிஆரின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. கிண்டியில் உள்ள எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் எம்ஜிஆர் சிறப்பு தபால் தலையை, தலைமை அலுவலர் மூர்த்தி வெளியிட ஓ.பன்னீர் செல்வம் பெற்று கொண்டார்.
பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு முதலமைச்சரும் அமைச்சர்களும் மலர் அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் கட்சிப் பிரமுகர்கள் திரளாக பங்கேற்றனர்.
தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில் எம்.ஜி.ஆர் சிறப்பு தபால் தலையை பொதுச்செயலாளர் சசிகலாவிடம் முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் வழங்கினார்.