'ஆண்களுக்கு மட்டும்....'- எம்ஜிஆரின் டெக்னிக்!
அமரர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் குறித்து பிரபல எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் இன்று ஃபேஸ்புக்கில் எழுதியுள்ள பதிவு இது.
திருப்பத்தூரில் (வேலூர்) இப்போதுள்ள பேருந்து நிலைய மைதானத்தில் எண்பதுகளின் ஆரம்பத்தில் ஒரு பொதுக் கூட்டம் நடந்தது. கூட்டமென்றால் அப்படியொரு கூட்டம். மரங்களில், மாடிகளில் இலைகளைப் போல தலைகள். அந்தக் கூட்டத்தில் இதே போல எம்ஜிஆர் பேசக் கேட்ட அனுபவம் உண்டு என்பதால் இதனை செய்தியாகத் தருகிறோம்.
ஓவர் டு பட்டுக்கோட்டை பிரபாகர்:
"என் பள்ளி நாட்களிலிருந்தே எம்ஜிஆரை மிகவும் பிடிக்கும். இப்போதும் அவர் படங்கள் டிவியில் ஓடினால் அரை மணி நேரமாவது என்னை உட்கார வைத்துவிடும்.
ரசித்து பலமுறை நான் பார்த்த படம் உலகம் சுற்றும் வாலிபன். அந்தப் படத்தின் திரைக்கதை, இயக்கத்தின் நேர்த்தியைக் குறித்து பல விவாதங்களில் பேசியிருக்கிறேன்.
அவர்மீது எனக்குள்ள வியப்பையும் மரியாதையையும் அதிகரிக்கச் செய்யும் ஒரு புதிய தகவல் இன்று படித்து ரசித்து வியந்தேன்.
அது:
எம்ஜிஆர் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசி முடித்துவிட்டு மைக்கில், "ஆண்களுக்கு மட்டும் ஒரு விஷயம் சொல்லப் போகிறேன்.. அதனால் பெண்கள் மட்டும் கலைந்து செல்லலாம்,'' என்றார்.
பெண்கள் கலைந்து சென்றதும்.. 'இப்போது ஆண்களும் கலைந்து செல்லலாம்..பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் அப்படிச் சொன்னேன்,' என்றார்.
-எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதனால்தான் அவர் எவர்கிரீன் தலைவர்!