ஜானகி எம்ஜிஆரின் 21ஆம் ஆண்டு நினைவு நாள்... அஞ்சலி செலுத்திய வளர்ப்பு மகள் சுதா - வீடியோ
ஜானகி எம்ஜிஆரின் 21ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று அவர்களது வளர்ப்பு மகள் ஜானகியின் சாமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
சென்னை: எம்ஜிஆரின் மனைவி ஜானகியின் 21ஆம் ஆண்டு நினைவுநாள், ராமாவரத்தில் ஜானகியின் சமாதியில் அனுசரிக்கப்பட்டது. எம்ஜிஆர்-ஜானகி வளர்ப்பு மகள் சுதா, ஜானகியின் நினைவு நாளான இன்று அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் மனைவி ஜானகி. இவர் எம்ஜிஆரின் மறைவுகுப் பிறகு அரசியலில் ஈடுபட்டார். எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக பிளவுபட்டு ஜானகி அணி, ஜெயலலிதா அணி என செயல்பட்டு வந்தது. தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சராக ஜானகி அம்மையார் 23 நாட்கள் பதவி வகித்தார். அதன் பின் அவரது ஆட்சி கலைக்கப்பட்டது.
அதன் பிறகு அரசியலில் இருந்து முற்றிலும் ஒதுங்கி இருந்தவர் 1996ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் தேதி தன்னுடைய 72ஆவது வயதில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். எம்ஜிஆர்-ஜானகி தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. அவர்கள் ஜானகியின் உறவினர் சுதாவை வளர்ப்பு மகளாக வளர்த்தனர்.
தற்போது சுதா ஜானகியின் சில சொத்துக்களை நிர்வகித்து வருகிறார். இன்று ஜானகி அம்மியாரின் 21ஆவது நினைவுநாள். ஜானகி அம்மையார் வாழ்ந்த ராமாவரம் தோட்டத்திலேயே அவர் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அங்கு அவருடைய சமாதியில் அவரது வளர்ப்பு மகளான சுதா மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.