சட்டசபையில் எம்ஜிஆர், சிவாஜி பாடல்களை பாடி அசத்திய கருணாஸ் !
சென்னை: "நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற' என்பது உள்பட இரண்டு திரைப்பட பாடல்களை சட்டசபையில் பாடினார் நடிகரும், சட்டசபை உறுப்பினருமான கருணாஸ்.
சட்ட சபை விதி 110-ன் கீழ், முதல்வர் ஜெயலலிதா புதிய அறிவிப்புகளை வியாழக்கிழமை வெளியிட்டார். இதையடுத்து, கூட்டணி கட்சிகளான இந்திய ஜனநாயக மக்கள் கட்சியின் தமிமுன் அன்சாரி, கொங்கு இளைஞர் பேரவையின் தனியரசு, முக்குலத்தோர் புலிப்படை அமைப்பைச் சேர்ந்த கருணாஸ் ஆகியோர் முதல்வரை வாழ்த்திப் பேசினர்.
இதில், திருவாடானை தொகுதி உறுப்பினர் கருணாஸ் ஒரு படி மேலே போய் தனது பேச்சை திரைப்படப் பாடலாக பாடி சபையை கலகலப்படையச் செய்தார். தெய்வமே...தெய்வமே...நன்றி சொல்வேன் தெய்வமே, தேடினேன்.., தேடினேன் கண்டு கொண்டேன் அன்னையை'.....என்று புத்தகத்தில் இருந்த முதல்வர் ஜெயலலிதா படத்தை காட்டி, பாட்டுப் பாடினார் கருணாஸ். அதைத் தொடர்ந்து, பேசிய கருணாஸ் தனது பேச்சை திரைப்படப் பாடலைப் பாடி முடித்தார்.
"நீங்க நல்லா இருக்கோணும்....நாடு முன்னேற...இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற......நல்லவெங்கல்லாம் எல்லாரும் இனி உங்க பின்னாலே..... நீங்க...நினைச்சதெல்லாம் நடக்கும் உங்க கண்ணு முன்னாலே'....என்று பாடி முதல்வரை வாழ்த்தினார் கருணாஸ். கருணாஸ் பாட்டு பாட அதிமுக உறுப்பினர்கள் தாளம் போடுவதுபோல் மேஜையை தட்ட சட்டசபையே கலகலப்பாக இருந்தது.