தமிழ் பல்கலைகழகத்தில் இன்று எம்ஜிஆர் சிலை திறப்பு.. ஆளுநர் பங்கேற்பு
தஞ்சையில் உள்ள தமிழ் பல்கலைக்கழகத்தில் இன்று எம்ஜிஆர் சிலை திறக்கப்படவுள்ளது.
தஞ்சை: தஞ்சையில் உள்ள தமிழ் பல்கலைக்கழகத்தில் இன்று எம்ஜிஆர் சிலை திறக்கப்படவுள்ளது. இதை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்து கொண்டு திறந்து வைக்கிறார்.
தமிழுக்கென்று தனி பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும் என்று கரந்தையில் உள்ள தமிழ் சங்கத்தால் கடந்த 1918-ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் 1981-ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற உலக தமிழ் மாநாட்டில் மற்றொரு தீர்மானம் நடைபெற்றது.
இதையடுத்து தமிழக முதல்வராக எம்ஜிஆர் இருந்த போது பல்கலைக்கழகம் திறப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு செப்டம்பர் 15-ஆம் தேதி 1981-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.
15 ஆண்டுகால கனவு நிறைவேறியதைத் தொடர்ந்து பல்கலையை உருவாக்கி தந்த எம்ஜிஆருக்கு மரியாதை செலுத்தும் விதமாக தமிழ் பல்கலைக்கழக ஆசிரியர்கள், பணியாளர்கள் அளித்த ரூ. 7 லட்சம் நிதியிலிருந்து அவருக்கு வெண்கல சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி சென்னையில் அந்த சிலை தயார் செய்யப்பட்டது. இன்று அந்த சிலை தமிழ் பல்கலைக்கழகத்தில் திறக்கப்படவுள்ளது. இதை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திறந்து வைக்கிறார்.