"மேடி" போட்ட செஞ்சுரி.. பேஸ்புக்கில் ஒரே கொண்டாட்டம்தான், குஷிதான்!
எம்ஜிஆர் ஜெயலலிதா திமுக கட்சி தொடங்கப்பட்டு 100 நாட்கள் ஆகியுள்ளதை பெருமையுடன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மாதவன்.
சென்னை: எம்ஜிஆர் ஜெயலலிதா திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டு 100 நாட்கள் ஆனதை முன்னிட்டு 100 மரக்கன்றுகளை கட்சி நிர்வாகிகள் மாவட்டந்தோறும் நடவேண்டும் என்று தனது முகநூல் பக்கத்தில் கேட்டுக்கொண்டுள்ளார் மாதவன்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் கணவர் மாதவன், தொடங்கியுள்ள கட்சியின் பெயர்தான் எம்ஜிஆர் ஜெஜெ திராவிட முன்னேற்றக் கழகம்.
கடந்த ஏப்ரல் 21ஆம் தேதியன்று ஜெயலலிதா சமாதிக்கு சென்று அந்த கட்சியை தொடங்கினார். கட்சி கொடி, கொள்கைகளையும் அறிமுகம் செய்தார்.
ஆர்.கே. நகர் தேர்தலின் போது மனைவி தீபாவிற்காக பிரச்சாரம் செய்தார் மாதவன், இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை போட்டு பிரிந்தாலும் போயஸ்தோட்டத்தில் நடந்த கலாட்டாவின் போது ஒன்றாகினர். அவ்வப்போது ஊடகங்களில் தலைகாட்டும் மாதவன், தற்போது ஃபேஸ்புக்கில் பதிவு ஒன்றினை போட்டுள்ளார்.
அந்த பதிவில், புரட்சி தலைவர் டாக்டர் எம்ஜிஆர் மற்றும் புரட்சி தலைவி டாக்டர் அம்மா அவர்களின் கொள்கைகளை வழி நடத்திச் செல்லும் வண்ணம் எம்ஜிஆர் ஜெஜெ திராவிட முன்னேற்றக் கழகம் துவங்கப்பட்டு 29.07.2017 அன்றுடன் 100 நாட்கள் நிறைவடைகிறது. அதனை முன்னிட்டு...100 மரக்கன்றுகளை நம் கட்சியின் சார்பில் அனைத்து மாவட்டச் செயலாளர்களும், அவரவர் மாவட்டங்களில் நடுமாறு அன்புடன் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இப்போதெல்லாம் வெற்றிகரமாக நூறு நாட்கள்' என்ற சினிமா போஸ்டர்களைக்கூட பார்க்க முடியவில்லை. கட்சி தொடங்கி நூறு நாட்கள் ஆனதை கொண்டாடுகிறார் மாதவன்.