பாலியல் வன்கொடுமை வழக்குகள்.. மருத்துவர்களுக்கு உள்துறை அமைச்சகம் முக்கிய அறிவுரை!
பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சிகிச்சை அளிக்கும், மருத்துவர்கள் அந்த பெண்ணின் கன்னித்தன்மை குறித்து பொதுவில் பேச கூடாது என்று உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை: பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சிகிச்சை அளிக்கும், மருத்துவர்கள் அந்த பெண்ணின் மனநிலை குறித்தோ, கன்னித்தன்மை குறித்தோ பொதுவில் பேச கூடாது என்று உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செய்ய வேண்டியது, செய்ய கூடாதது என்று உள்துறை அமைச்சகம் சில அறிவுரைகளை வெளியிட்டுள்ளது. கடந்த ஜூலை 25ம் தேதி அவர்கள் வெளியிட்ட இந்த அறிவுரையில் சில முக்கியமான அம்சங்கள் அடங்கி உள்ளது.
பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சிகிச்சை அளிக்கும், மருத்துவர்கள் இரண்டு முக்கியமான பணிகளை கடைபிடிக்க வேண்டும். முதலாவது பாதிக்கப்பட்ட நபருக்கு சரியான உடல் மற்றும் மனநல மருத்துவம் அளிக்க வேண்டும். இரண்டாவது, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சட்ட ரீதியாக உதவும் மருத்துவ ஆவணங்களை தயார் செய்வது என்று இரண்டு பணிகளை செய்ய வேண்டும்.
இந்த அறிவுரைகள் தற்போது காவல்துறைக்கும் வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளில் கண்டிப்பாக இதை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் மருத்துவர்கள், பாதிக்கப்பட்ட பெண்களிடம் கன்னித்தன்மை சோதனை நடத்த கூடாது . பெண்ணின் உடல் உறுப்புகள் குறித்தும், கற்பு குறித்தும், அந்த பெண்ணின் மனநிலை குறித்தும் மருத்துவர்கள் பொதுவில் கருத்து தெரிவிக்க கூடாது என்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகள் பாலினம் சார்ந்தது கிடையாது. ஆண்கள், திருநங்கைகள், திருநம்பிகளுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளிலும் இதே விதியை கடைபிடிக்க வேண்டும். இதை கண்டிப்பாக முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.