தினகரனின் புரோக்கர் சுகேஷ் கோவை அழைத்து வரப்பட்டார்... இது வேற வழக்குப்பா!
பணமோசடி வழக்கில் டெல்லி சிறையில் இருந்து புரோக்கர் சுகேஷ் சந்தர் கோவைக்கு அழைத்து வரப்பட்டார்.
கோவை: அரசு ஒப்பந்தம் வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த வழக்கில் ஆஜர்படுத்துவதற்காக டெல்லி திஹார் சிறையில் இருந்து தினகரனின் புரோக்கர் சுகேஷ் கோவைக்கு அழைத்து வரப்பட்டார்.
தேர்தல் ஆணைய அதிகாரிகள் மூலம் இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தருவதாகக் கூறிய புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இரட்டை இலை சின்னத்தை வாங்கித் தருவதற்காக வாங்கியதாக சொல்லப்படும் ரூ.1.30 கோடி பணத்துடன் சுகேஷ் டெல்லியில் கடந்த ஏப்ரல் மாதம் சிக்கினார்.
இந்த வழக்கில் இருந்து தினகரன், மல்லிகார்ஜூனா ஜாமினில் வெளிவந்த நிலையில் சுகேஷ் மட்டும் இன்னும் திஹார் சிறையில் உள்ளார். இந்நிலையில், 2010ம் ஆண்டு முதல்வர் அலுவலக தனி செயலர் என்று கூறி ரூ.2.43 மோசடி செய்ததாக சுகேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தொழிலதிபர் ராஜவேல் என்பவரிடம் அரசு ஒப்பந்தம் வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக அளித்த புகாரின் பேரில் இந்த வழக்கு மீது கோவை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக சுகேஷ் சந்திரசேகர் ரயில் மூலம் டெல்லியில் இருந்து கோவைக்கு அழைத்து வரப்பட்டார்.
இந்த வழக்கில் சுகேஷ் இரண்டாவது குற்றவாகியாக சேர்க்கப்பட்டுள்ளார். எனினும் இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் முக்கிய குற்றவாளி என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சுகேஷ் கோர்ட் வளாகத்திற்குள் அழைத்து வரப்பட்டார்.