அதிமுக அமைச்சர்களின் நள்ளிரவு நாடகத்தை கண்டுகொள்ளாத ஜெயா டிவி!
அதிமுகவின் இரு அணிகளும் எப்போது வேண்டுமானால் இணையலாம் என்ற நிலையில் சென்னையில் அமைச்சர்கள் தலைமையில் அவசர ஆலோசனை நடைபெறுவதாக செய்தி சேனல்கள் பிரேகிங் நியூஸ் போட்டுக் கொண்டிருக்கும் வேளையில் ஹாயாக இருந
சென்னை : அதிமுகவை ஒற்றுமையாக வழி நடத்தி செல்வதற்கான அவசர கூட்டம் என்று செய்தி சேனல்கள் அனைத்தும் பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், அதிமுகவின் சேனலான ஜெயா டிவி எதையும் கண்டுகொள்ளாமல் அரைத்த மாவையே அரைத்து கொண்டிருந்தது.
அதிமுக சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என பிளவுபட்டு கிடப்பதால் சின்னமும் கட்யும் ஒரேயடியாக முடக்கப்பட்டுவிடுமோ என்று அதிமுகவினருக்கு திடீர் ஞானோதயம் வந்ததோ என்னவோ தெரியவில்லை கட்சியை ஒருங்கிணைக்கும் பணியில் இரு அணியினரும் தீவிரமாக உள்ளனர்.
ஓ.பன்னீர்செல்வம் அணி மற்றும் முதலமைச்சர் அணி ரகசிய பேச்சுவார்த்தை நடத்திவிட்டு ஒல்லாம் ஓகே ஆனதும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் நாங்கள் தயார் என ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்தார். இந்த பச்சைக்கொடிக்கு தான் காத்திருந்தோம் என்று சொல்லாத கணக்காக மக்களவைத்துணைத் தலைவர் தம்பிதுரை அடுத்தடுத்து முதலமைச்சரை சந்தித்ததோடு, வந்த காரியத்தை சூட்டோடு சூடாக முடித்துவிட வேண்டும் என்று டெல்லிக்கும் பறந்து விட்டார்.
இந்நிலையில் அமைச்சர் தங்கமணி வீட்டில் 20க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் அவசர ஆலோசனை நடத்துவதாக இரவு 10 மணிக்கு செய்தி தீயாக பரவ, அமைச்சர்வீட்டில் குவிந்தன மீடியாக்கள். ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை, நாளையே இரு அணியும் ஒன்று கூடுமோ, அடுத்து என்ன நடக்கும் என்று 24 மணி நேர செய்தி சேனல்கள் அடுத்தடுத்து பிரேக்கிங்குகளாக அவிழ்த்து விடும் நேரத்தில் ஜெயா டிவியில் என்ன செய்தி என்று பார்க்கலாம் என சேனலை மாத்தினால், ஆச்சரியம் போங்கள் ஜெயா பிளஸ் தொலைக்காட்சியில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ஏதோ ஒரு செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது.
அவர்களது ஸ்கிராலில்கூட பிரேக்கிங் என்ற வார்த்தையே இல்லை. என்னது அதிமுக அமைச்சர்கள் அவசர ஆலோசனையா என்ற தொணியில் ஈஓட்டிக் கொண்டிருந்தனர்.
சரி ஜெயா டிவியிலாவது முக்கியச் செய்தி என்று ஒரு வரி கீழே ஓடுகிறதா என்று பார்த்தால், அந்த சேனலில் தேன்கிண்ணம் நிகழ்ச்சியில் 'நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை' என சிச்சுவேஷன் சாங் ஓடிக்கொண்டிருந்தது. அவர்களை என்ன சொல்வது யார் கட்டளையை ஏற்று செயல்படுவது என்ற குழப்பம் அவர்களுக்கும் இருக்கத்தானே செய்யும்.
ஒருவழியாக 2 மணிநேரம் கழித்து 'அதிமுக இரு அணிகள் இணைவது குறித்து பேச்சுவார்த்தை' என ஸ்குரோலிங் போட்டு வரலாற்று கடமையை நிறைவு செய்துவிட்டது ஜெயா குழுமம்!