நள்ளிரவில் "தட.. தட".. கதவைத் தட்டும் "பேய்"...தீப்பந்தம் ஏந்தி வினோத பூஜையில் கிராம மக்கள்!!
வேலூர்: வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள கிராமத்தில் பேய்கள் நடமாட்டம் இருப்பதாக கூறி அப்பகுதிமக்கள் நள்ளிரவில் தீப்பந்தம் ஏந்தி பூஜை நடத்தியுள்ளனர்.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ளது பத்தாப் பேட்டை கிராமம். இந்த கிராமத்தில் பேய் புகுந்துள்ளதாக அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். பேயை விரட்டும் நோக்கில் பூஜைகளையும் செய்துவருகின்றனர்.
கதவைத் தடதடவென தட்டும் பேய்
கிராமத்தில் பேய்கள் உலாவுகிறது என அச்சமடைந்துள்ள மக்களுக்கு மேலும் மேலும் அதிர்ச்சியளிக்கும் சம்பவங்கள் நிகழ்கிறதாம். கடந்த சில நாட்களாக நள்ளிரவில் வீட்டின் கதவுகளை தடதடவென பேய் தட்டுகிறதாம். இதனால் வீட்டிற்குள்ளேயே முடங்கிய மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
தானாக உருண்டு விழும் பொருட்கள்
படத்தில் வரும் பேய்கள் தானாக பொருட்களை உருண்டு விழச் செய்வதை நாம் பார்த்திருப்போம். ஆனால், தற்போது அந்த கிராமத்தில் நிஜத்திலேயே வீட்டினுள் இருக்கும் பொருட்கள், தானாகவே உருண்டு விழுகிறதாம். பொருட்கள் தானாக விழுவதற்கு காரணம் பேய் தானோ என சந்தேகிக்கும் கிராமமக்கள், தற்போது தீவிர கடவுள் வழிபாட்டில் இறங்கியுள்ளனர். பேய்கள் இரவில் கதவுகளை தட்டுகிறது என்பதால், வீடுகளில் வேப்பிலை வைத்தும், கதவுகளில் நாமம் வரைந்தும் பூஜை நடத்தி வருகின்றனர்.
நள்ளிரவில் தீப்பந்தம் ஏந்தி பூஜை
இப்படி செய்தும் வீட்டின் கதவுகள் நள்ளிரவில் தட்டப்படும் சத்தம் கேட்கிறதாம். இதற்காக கோவிலில் பூஜை நடத்தியபோது சாமி ஆடியவர் குறி கூறியுள்ளார். அதன்படி நேற்று நள்ளிரவில் ஊர் மக்கள் ஒன்றாக கூடி, தீ பந்தம் ஏந்தி ஊரில் இருந்து எல்லை கோவில் வரை சென்று பூஜை நடத்தினர்.
அச்சத்தை போக்க வேண்டும்
பேய்கள் பீதியில் உள்ள மக்கள் தங்களை பாதுகாக்க காவல் துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். காவல் துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணிகளை மேற்கொண்டு கிராம மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாகயாகும்.