மிலாடி நபி திருநாள்- டிச.13 அரசு விடுமுறை- அரசாணை வெளியீடு
முஸ்லீம்களின் மிக முக்கிய பண்டிகையான மிலாடி நபி திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 13ம் தேதி அரசு விழாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 12ஆம் தேதி திங்கட்கிழமை பொது விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது டிசம்பர் 13ம் தேதிதான் மிலாடி நபி விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆளுநர் வித்யாசாகர் ராவின் உத்தரவின்பேரில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 12ஆம் தேதி (திங்கட்கிழமை) பொது விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தமிழக அரசின் தலைமை காஜி எழுதிய கடிதத்தில், ரபியுல் ஹவ்வல் பிறை நவம்பர் 30ஆம் தேதி தெரிந்ததால் மிலாடி நபி டிசம்பர் 13ஆம் தேதி கொண்டாடப்படும் என்று கூறியிருந்தார். அதன்படி டிசம்பர் 13ஆம் தேதியை மிலாடி நபிக்கு பொது விடுமுறை தினமாக அறிவிக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
அதனை பரிசீலனை செய்த அரசு, டிசம்பர் 13ஆம்தேதியை மிலாடி நபி பொது விடுமுறையாக அறிவிக்க முடிவு செய்தது. அதன்படி டிசம்பர் 12ஆம் தேதிக்குப் பதில், டிசம்பர் 13ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மிலாடி நபி பொது விடுமுறை என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.