திண்டுக்கல் மாவட்டத்தில் மிக லேசான நில அதிர்வு- வெடிசப்தம் குறித்து விசாரணை
திண்டுக்கல் மாவட்டத்தில் வெடிசப்தத்துடன் நில அதிர்வு உணரப்பட்டது.
Recommended Video
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தின் பல பகுதிகளில் பயங்கர வெடிசப்தத்துடன் இன்று காலை மிக லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இன்று காலை 8.10 மணியளவில் திடீரென பயங்கர வெடிசப்தத்துடன் கூடிய அதிர்வுகள் உணரப்பட்டன. சில வினாடிகள் மட்டுமே இந்த அதிர்வு உணரப்பட்டது.
இதனால் திண்டுக்கல் மாவட்ட மக்களிடையே அச்சம் ஏற்பட்டது. இது தொடர்பாக கொடைக்கானல் வானிலை ஆராய்ச்சி மைய தலைமை விஞ்ஞானி செல்வேந்திரன் கூறுகையில், பூமியின் கீழ் பகுதியில் இந்த நில அதிர்வு ஏற்பட்டிருக்கிறது. இது ரிக்டரில் 3 ஆக பதிவாகி இருந்தது என்றார்.
மேலும் ஹரியானாவின் போலரோ பகுதியும் திண்டுக்கல் பகுதியும் ஒரே அடுக்கில் அமைந்துள்ளன. அங்கு ஏற்பட்ட நில அதிர்வு இங்கும் உணரப்பட்டுள்ளது என்றும் செல்வேந்திரன் தெரிவித்தார்.
அதேநேரத்தில் வெடிசப்தம் குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ரெங்கமலைப் பகுதிகளில் கனிமவளத்தை எடுப்பதற்காக அவ்வப்போது விமானங்கள் பறந்து செல்வதாக ஏற்கனவே குற்றச்சாட்டு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.