வேலூரில் லேசான நில அதிர்வு - சுவர்களில் விரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சம்
வேலூர் அருகே ஏற்பட்ட லேசான நில அதிர்வு காரணமாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி தெருவில் தஞ்சமடைந்தனர்.
வேலூர்: பேரணாம்பட்டு மற்றும் சுற்றுப்பகுதியில் இன்று ஏற்பட்ட லேசான நிலஅதிர்வு உணரப்பட்டது. இதனால் வீடுகளில் சுவர்கள் விரிசல் ஏற்பட்டது.
பேரணாம்பட்டு பஜார்வீதி, திரு.வி.க.நகர், லால்மசூதிதெரு, ஒத்தவாடை தெரு, டிப்புசாதெரு, ஏரிகுத்திமேடு, காமராஜர் நகர், மதனிதெரு, தரைக்காடு பகுதியில் இன்று காலை 7.05 மணிக்கு இரண்டாவது முறையாக நில அதிர்வு உணரப்பட்டது ஏற்பட்டது.
முதலில் லேசான அதிர்வு உணரப்பட்டபோதிலும், இரண்டாவது முறையாக பயங்கர சத்தத்துடன் பூமி அதிர்வு ஏற்பட்டது.
இதனால் வீடுகளில் இருந்த பாத்திரங்கள் உருண்டன. இதனை உணர்ந்த பொதுமக்கள் அச்சப்பட்டு வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர்.
இந்த நிலஅதிர்வு காரணமாக, ஏரிகுத்தி மேட்டில் பயாஸ்அமகது என்பவரது வீட்டில் சுவற்றில் விரிசல் ஏற்பட்டது. அதேபோல, ஒத்தவாடை தெருவில் காபீர் என்பவர் வீட்டில் குளியலறையில் இருந்த தண்ணீர் வாளிகள் உருண்டன.
இதேபோல் மேல்பட்டி, செண்டத்தூர் பகுதியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. பேரணாம்பட்டு தாசில்தார் மகாலிங்கம் நில அதிர்வு உணரப்பட்ட பகுதி பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டார்.