ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலத்திற்கான பீரங்கி வண்டி சென்னைக்கு வருகை
ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலத்திற்கான பீரங்கி வண்டி சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சென்னை: மறைந்த ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலத்திற்கான பீரங்கி வண்டி டெல்லியில் இருந்து பாதுகாப்பு அமைச்சகம் தனி விமானத்தின் மூலம் சென்னை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் நுரையீரல் தொற்றுக் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த ஜெயலலிதா, நேற்று இரவு மரணமடைந்தார். அவருக்கு அளிக்கப்பட்ட உலகத் தரம் வாய்ந்த மருத்துவ சிகிச்சையால் மீண்டு வந்துவிடுவார் என்று அதிமுக தொண்டர்கள் எதிர்ப்பார்த்திருந்த நிலையில் அவரது மரணச் செய்தி அனைவரிடத்திலும் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவரது உடல் சென்னை ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று வைக்கப்பட்டது. பிரமதர் மோடி, மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு உள்ளிட்ட தலைவர் சென்னை வந்து ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரை கண்ணில் ஒரு முறை பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலுடன் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் ராஜாஜி ஹால் முன்பு கூடியுள்ளனர்.
இன்று மாலை அவரது உடல் எம்.ஜி.ஆர் நினைவிடத்திற்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. அதற்கு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ராஜாஜி ஹாலில் இருந்து அவரது உடல் ராணுவ பீரங்கியில் ஏற்றப்பட்டு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பின்னர் கடற்கரை மணலில் உள்ள எம்.ஜி.ஆர் சமாதி அருகில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலம் செல்வதற்கான பீரங்கி வண்டி டெல்லியில் இருந்து பாதுகாப்பு அமைச்சகம் விமானம் மூலம் சென்னை அனுப்பி வைத்துள்ளது. பீரங்கி வண்டி வந்த பின்னர், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அதில் ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலம் நடைபெறும்.