ஆதாரமில்லாமல் பால் நிறுவனங்களுக்கு எதிராகப் பேசக்கூடாது: அமைச்சருக்கு ஹைகோர்ட் எச்சரிக்கை
ஆதாரமில்லாமல் பால் நிறுவனங்களுக்கு எதிராக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
சென்னை: உயர்நீதிமன்ற உத்தரவை முறையாகப் பின்பற்றாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனியார் பால் நிறுவனங்கள் பாலில் கலப்படம் செய்வதாக குற்றம்சாட்டினார். தனியார் நிறுவனங்களின் பாலில் ரசாயனக் கலப்படம் உள்ளதாகக் கடந்த மே மாதம் தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார். இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஹட்சன் அக்ரோ, டோட்லா, விஜய் ஆகிய பால் நிறுவனங்கள் சார்பில் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் உயர்நீதிமன்றம், ஆதாரம் இல்லாமல் அமைச்சர் பேசக் கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. நீதிமன்றம் உத்தரவிட்டும் அமைச்சர் தவறான தகவல்களைப் பரப்புவதாக பால் நிறுவனங்கள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றம் சாட்டியது. இதனையடுத்து உயர்நீதிமன்றம் அமைச்சரை எச்சரித்துள்ளது.
பால் கலப்பட வழக்கில் விரிவான விசாரணை நாளைப் பிற்பகலுக்கு நடக்கும் எனக் கூறி நீதிமன்றம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.