ஆளுங்கட்சிக்கு ஆதரவான நடிகர் சங்கம் நடத்தும் கிரிக்கெட் போட்டியை தடை செய்க.. லக்கானியிடம் புகார்
சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக உள்ளது. அந்த சங்கததைச் சேர்ந்த சரத்குமார், கருணாஸ், சி.ஆர்.சரஸ்வதி ஆகியோர் அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். எனவே இந்த சங்கம் நடத்தும் கிரிக்கெட் போட்டிக்குத் தடை விதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் - தொழிலாளர்கள் சங்கம் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் தலைவரான எஸ்.ஏ. பொன்னுச்சாமி கொடுத்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னை சேப்பாக்கத்தில் ஏப்ரல் 17ம் தேதி நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடக்க இருப்பதாக பத்திரிக்கை வாயிலாக அறிந்து கொண்டேன். தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்து வரும் பல்வேறு உறுப்பினர்கள் ஆளுகட்சிக்கு ஆதரவாக இருந்து வருகிறார்கள்.
இந்த நேரத்தில் நடிகர் நடிகைகள் கலந்து கொள்ளும் நட்சத்திர கிரிக்கெட் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றால் அது ஆளும்கட்சிக்கு பிரச்சாரம் செய்கின்ற நிகழச்சியாக அமைந்து விடும்.
தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணை தலைவர் பதவியில் இருக்கும் நடிகர் கருணாஸ், முன்னாள் சங்கத் தலைவர் சரத்குமார், நடிகை சி.ஆர் சரஸ்வதி ஆகியோர் நடைபெறும் தமிழக சட்டமன்ற தேர்தலில் தற்போதைய ஆளுங்கட்சி வேட்பாளர்களாகச் அறிவிக்கப்பட்டுள்ளானர்.
இதனால், நடிகர் சங்கம் நடத்தும் இந்த விளையாட்டு போட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானதாகவும், சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் பொன்னுச்சாமி தெரிவித்துள்ளார்.