பால் பண்ணைகளின் கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ 46.5 கோடி நிதி ஒதுக்கீடு: ஜெ. அறிவிப்பு
சென்னை: பால் உற்பத்தித் தொழிலை ஊக்கப்படுத்துவதற்காக ரூ. 46 கோடியே 50 லட்சம் செலவில் பால் பண்ணைகளின் கட்டமைப்பு மேம்படுத்தப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் சட்டசபையில் 110-வது விதியின் கீழ் வாசித்த அறிக்கையில் கூறியதாவது :-
வெண்மைப் புரட்சி...
பால் உற்பத்தித் தொழிலை ஊக்கப்படுத்துவதன் மூலம் ஏழை விவசாயிகளின் பொருளாதார நிலை உயர்ந்து, அவர்தம் வாழ்வு வளம் பெறும் என்பதை கருத்தில் கொண்டு எனது தலைமையிலான அரசு இரண்டாம் வெண்மை புரட்சிக்கு வித்திட்டு பால் உற்பத்தியை பெருக்கு வதற்கான தொடர் நடவடிக்கைகள் எடுத்ததன் பயனாக, அதிக பால் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்றாக விளங்குகிறது.
ஆவின் பால் கொள்முதல்....
முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக் காலத்தில், நாளொன்றுக்கு 20 லட்சம் லிட்டர் என்று இருந்த ஆவின் பால் கொள்முதல் தற்போது 2013-2014-ல் நாள் ஒன்றுக்கு 23.22 லட்சம் லிட்டர் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது.
பால்பண்ணை கட்டமைப்புச் செலவு...
இதன் தொடர்ச்சியாக, பால் பண்ணைகளின் கட்டமைப்பை அதிகரித்து பால் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் நலனுக்காகவும், கால்நடை தீவன பயன்பாட்டை ஊக்கப்படுத்தவும் கீழ்க்காணும் பணிகள் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள், கூட்டுறவு இணையத்தின் மூலம் 46 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் இம்மாமன்றத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
முக்கிய உபகரணங்கள்...
1. சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், விழுப்புரம் மற்றும் வேலூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களின் பால் பண்ணை மற்றும் பால் குளிரூட்டும் நிலையங்களின் இயந்திர தளவாடங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம் படுத்த புதிய பால் குளிரூட்டும் இயந்திரங்கள், பால் கொள்கலன்கள், பாட்டில்களில் நெய் நிரப்பும் தானியங்கி இயந்திரம், மின்ஆக்கி, பால் பதப்படுத்தும் இயந்திரங்கள், கொழுப்பு பிரித்தெடுக்கும் இயந்திரங்கள், பால் சமன்படுத்தும் இயந்திரங்கள், பிளாஸ்டிக் டப்புகள் சுத்தம் செய்யும் இயந்திரங்கள், பால் பாக்கெட்டுகள் மீது, உரிய விவரங்களை அச்சிடும் வெப்பமாற்று முறை உபகரணங்கள் ஆகியவை 35 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்.
பயனாளிகள்...
இதன் மூலம் சுமார் 2 லட்சத்து 26 ஆயிரத்து 432 பால் உற்பத்தியாளர்களும், 5 லட்சத்து 13 ஆயிரத்து 138 பால் நுகர்வோர்களும் பயனடைவார்கள்.
கால்நடை தீவனப் பயன்பாடு...
2. தமிழ்நாட்டில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் இடையே கால்நடை தீவனப் பயன்பாட்டை ஊக்கப்படுத்தும் வகையில், ஈரோடு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் தீவன தொழிற்சாலை 10 கோடியே 73 லட்சம் ரூபாய் செலவில் விரிவாக்கப்பட்டு, தீவன உற்பத்தி திறன் நாளொன்றுக்கு 150 டன் என்ற அளவிற்கு உயர்த்தப்படும். இத்திட்டத்தின் மூலம் சுமார் 4 லட்சத்து 29 ஆயிரம் உறுப்பினர்கள் பயனடைவார்கள்' என இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.