'மக்களின் முதல்வரும்' ஆவின் பால் விலை உயர்வும்...!
சென்னை: 2011ம் ஆண்டு மூன்றாவது முறையாக அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பு ஏற்றது. இந்த மூன்று ஆண்டுகளில் ஆவின் பாலின் விலை 84 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது லிட்டருக்கு 16 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2011ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் பொறுப்பு ஏற்றது. அப்போது பஸ் கட்டணம், பால் விலை மற்றும் மின் கட்டணம் ஏற்றப்பட்டது. அதற்கு மிகவும் நிதி நெருக்கடியில் உள்ள இந்த மூன்று துறைகளையும் காப்பாற்ற, இந்த விலை உயர்வு அவசியம் என்று அரசு தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது.
விற்பனை விலை, கொள்முதல் விலை
அந்த வகையில் கடந்த, 2012ம் ஆண்டு பால் விற்பனை விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்பட்டது. அதன்பின் விற்பனை விலை உயர்த்தப்படாமல் இருந்தது. ஆனால் கொள்முதல் விலை மட்டும் 3 முறை உயர்த்தப்பட்டது. கடைசியாக கொள்முதல் விலை கடந்த ஜனவரி 1ம் தேதி ரூ.3 உயர்த்தப்பட்டது.
லிட்டருக்கு ரூ. 10 உயர்வு
இந்த நிலையில் தற்போது ஆவின் பால் லிட்டருக்கு ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய திமுக அரசையே காரணம் கூறியுள்ளார் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.
ரூ.16 உயர்வு
தமிழகத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் கடந்த 2012ம் ஆண்டு பால் விற்பனை விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்பட்டது. அதன்பின் விற்பனை விலை உயர்த்தப்படாமல் இருந்தது. அதிமுக ஆட்சிக்கு வந்து மூன்றாவது ஆண்டு நிறைவடைந்த நிலையில், 2வது முறையாக தற்போது லிட்டருக்கு ரூ.10 விலை ஏற்றப்பட்டுள்ளது. அதாவது ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகளில் ரூ.16 விலை உயர்த்தி நடுத்தர மக்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
தள்ளாடிய ஆவின் நிறுவனம்
திமுக ஆட்சியின் போது, ஆவின் நிறுவனத்தின் செயல்பாடு அதல பாதாளத்துக்குச் சென்று விட்டது. கொள்முதல் செய்த பாலுக்கு 45 நாள்கள் கழித்துக் கூட பணம் அளிக்க முடியாத மோசமான நிலைமை ஏற்பட்டதோடு, தனது கொள்முதலையே குறைத்துக் கொள்ளும் அவல நிலைக்கு ஆவின் நிறுவனம் தள்ளப்பட்டது.
அரசு நிதி உதவி
இப்படி தள்ளாடிக் கொண்டிருந்த ஆவின் நிறுவனத்தை மீட்டெடுக்க, கிட்டத்தட்ட ஆறு மாதம் வரையில் மாதா மாதம் ரூ.17 கோடி நிதியுதவியை வழங்கி, அதனை ஒரு ஸ்திரத் தன்மைக்கு கொண்டு வந்த பெருமை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைச் சாரும். இதுவரை, ரூ.192.14 கோடி நிதியுதவி தமிழக அரசால் ஆவின் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா பரிந்துரையா?
இந்த அரசைப் பொறுத்தவரை ஜெயலலிதாவின் உத்தரவில்லாமல் ஒரு அணுவும் அசைவதில்லை என்பதை சின்ன குழந்தையும் சொல்லும். ஆனால், எதற்கெடுத்தாலும் ''மக்களின் முதல்வர் புரட்சித் தலைவி அம்மாவின் ஆசியுடன்'' என்று தொடங்கும் ஜெயா டிவி நியூசில் பால் விலை உயர்வு விஷயத்தில் மட்டும் 'மக்களின் முதல்வர்' பெயரை முன் நிறுத்தவே இல்லை.
ரூ.300 கூடுதல் செலவு
பால் விலை உயர்வு, தமிழக மக்களை வெகுவாக பாதித்துள்ளது. குறிப்பாக நடுத்தர குடும்பங்களில் காலை, மாலை நேரங்களில் வீட்டில் காபி, பால் அல்லது டீ குடிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் நடுத்தர மக்கள் மிகவும் பாதித்துள்ளனர். ஒரு வீட்டில் 2 பேர் முதல் 4 பேர் வரை இருக்கும்பட்சத்தில், தினமும் ஒரு லிட்டர் முதல் 2 லிட்டர் வரை பால் பயன்படுத்துகின்றனர். எனவே, குறைந்தபட்சம் ஒரு லிட்டர் பால் வாங்கினால், இந்த விலை உயர்வின் மூலம் மாதம் ரூ.300 கூடுதலாக செலவிட வேண்டியிருக்கும்.
ஹோட்டல்களில் விலை உயரும்
ஆவின் பால் விலை உயர்வால், கடைகளில் டீ, காபி விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை ஆவின் பாலை விட தனியார் பாலைத்தான் அவர்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர். தனியார் பாலுடன் ஆவின் பாலையும் கலந்து கொடுப்பார்கள். மாவட்டங்களில் அரசு பாலையே நம்பியுள்ளனர். இதனால் பால் விலை உயர்வால் டீ, காபி விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
நெய், வெண்ணெய் விலை உயரும்
ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் நெய், வெண்ணெய், இனிப்பு ஆகியவற்றின் விலைகளை 10 முதல் 15 சதவீதம் வரை விரைவில் விலை உயர்த்த ஆவின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
17 வகைப் பொருட்கள்
ஆவின் நிர்வாகத்தின் சார்பில் பால் தவிர்த்து சுமார் 17க்கும் மேற்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக ஆவின் நெய், வெண்ணெய், 9 வகையான ஐஸ்கிரீம், 5 வகையான இனிப்புகள், பாதாம் பவுடர், மோர், லஸ்ஸி, ஆகியவை பொது மக்கள் அதிகமாக வாங்கக் கூடிய பொருட்கள் ஆகும். இது தவிர 43 வகைகளில் ஆவின் பொருட்கள் ஆவின் பூத்கள் மூலம் கிடைக்கிறது.
10 சதவிகிதம் உயர்வு
தற்போது விற்பனையில் உள்ள ஆவின் நெய் ஒரு கிலோ ரூ. 365, வெண்ணெய் 500 கிராம் ரூ. 160, பாதாம் பவுடர் ஒரு கிலோ ரூ.340, லஸ்ஸி ரூ. 20, 8 வகையான மில்க் ஷேக் ரூ. 20 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது. உயர்த்தப்பட்ட ஆவின் பால் விலை வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு பட்சத்தில் அதனை சார்ந்த இதர பொருட்களின் விலையும் உயர்த்தப்படும். இதர பொருட்களின் விலைகள் 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை உயர்த்தப்படலாம்'' என்று ஆவின் நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.
கசப்பு மருந்து
கடந்த 2012ம் ஆண்டு கட்டணத்தை உயர்த்திய அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, கட்டணத்தை உயர்த்தாவிட்டால் ஆவின் பால், போக்குவரத்து கழகத்தை இழுத்து மூட வேண்டியதான் என்று கூறிய ஜெயலலிதா, இந்த விலை உயர்வை பொதுமக்கள் கசப்பு மருந்து போல ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார். இந்த கசப்பு மருந்து இன்று வரை தொடரத்தான் செய்கிறது. நோயின்றி கசப்பு மருந்துகளை மட்டுமே சாப்பிட்டால் மக்கள் முடமாகிவிடுவார்கள் என்பதை ஆள்பவர்கள் உணர்வார்களா?