ஜெயலலிதாவிடம் இரட்டை இலக்க எண்களில் தொகுதிகள் கேட்டுள்ளேன்- பண்ருட்டி வேல்முருகன்
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிடம் இரட்டை இலக்க எண்ணில் தொகுதிகளை ஒதுக்க கோரிக்கை விடுத்துள்ளதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை போயஸ் கார்டனில் இந்திய குடியரசு கட்சியின் செ.கு.தமிழரசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேல்முருகன், இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் பாக்கர், கொங்கு இளைஞர் பேரவையின் தனியரசு, அகில இந்திய பார்வார்டு பிளாக் மாநில பொதுச்செயலாளர் கதிரவன், தமிழ் மாநில முஸ்லிம் லீக்கின் ஷேக் தாவூத், சமத்துவ மக்கள் கழகத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் ஆகியோருடன் ஜெயலலிதா நேற்று கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன், "நாங்கள் வலுவாக இருக்கின்ற வடதமிழ்நாடு மற்றும் தென் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் எங்கள் கட்சி வளர்ந்து வருகிறது. சாதி, மதங்களூக்கு அப்பாற்பட்டு பொதுவான அரசியல் கட்சியை நடத்தி வருகிறோம். இந்த தேர்தலில் மீண்டும் ஜெயலலிதா முதல்வராக வருவதற்கு எங்கள் முழு ஆதரவையும் அளிக்கிறோம்.
எமது கட்சியின் சார்பாக தமிழ்நாட்டின் முக்கிய தொகுதிகளில் நாங்கள் வலுவாக இருக்கின்ற இடங்களில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகளை எங்களுக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். அதற்கு ஜெயலலிதா, மூத்த அமைச்சர்களை கொண்ட குழு உங்களோடு பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று தெரிவித்தார். அந்த குழுவையும் எனக்கு அறிமுகம் செய்துவைத்தார்.
எந்த தொகுதிகள் வேண்டும் என்ற பட்டியலை ஜெயலலிதாவிடம் தந்திருக்கிறோம். பேச்சு வார்த்தையில் அது இறுதி வடிவம் பெறும். ஏற்கனவே எங்கள் கட்சியில் ஐந்து முன்னாள் எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் இடங்கள் பெற்றுத்தரவேண்டிய நெருக்கடியில் இருக்கிறேன்.
மேலும், பல்வேறு முன்னணி கட்சித்தலைவர்கள் இருக்கிறார்கள். அதனால் இரட்டை இலக்க எண்ணில் தொகுதியை எதிர்பார்க்கிறோம். இதையெல்லாம் கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளேன். நிச்சயமாக ஜெயலலிதா அவற்றை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார். தேர்தல் தெருங்கிவிட்டது. களப் பணியாற்றுவோம் என்று கூறியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. அதனால் விரைவில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வரும் என்று எதிர்பார்க்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.