மாட்டுச்சாணத்தில் மட்டுமல்ல கோமியத்திலும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது : அமைச்சர் கே.பி. அன்பழகன்
மாட்டுச்சாணத்திலும், கோமியத்திலும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாக அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.
சென்னை : மாட்டுச் சாணத்திலும், கோமியத்திலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிக அளவில் இருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கூறியுள்ளார்.
சென்னை அண்ணாபல்கலைக்கழகத்தில் 3வது இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா இன்று தொடங்கியுள்ளது. மாணவர்களின் அறிவியல் திறனை மேம்படுத்தும் விதமாக திங்கட்கிழமை வரை நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியை மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனும் பங்கேற்றார்.மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய அமைச்சர் அன்பழகன், அயல்நாடுகளை ஒப்பிடும் போது நம் நாட்டில் மாணவர்களுக்கு அறிவியல் மீதான நாட்டம் குறைந்த அளவே இருப்பதாக தெரிவித்தார்.
நம் அன்றாட வாழ்விலேயே பல அறிவியல் அம்சங்களை நாம் மறந்து வருகிறோம், அவற்றை நாம் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். மாட்டுச் சாணத்திலும், கோமியத்திலும் அதிக நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது என்றும் அன்பழகன் பேசினார்.
மதுரையில் டெங்கு விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ வீட்டு வாசலில் மாட்டுச்சாணம் தெளிக்கும் வசதி உள்ளவர்கள் அதனை செய்ய வேண்டும் என்றார். ஏனெனில் வாசலில் சாணம் தெளிக்கும் முறையால் கிருமிகள் அழியும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறியிருந்த நிலையில் தற்போது உயர்கல்வி அமைச்சரும் அதே கருத்தை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.