பசும்பொன் வரும் ஜெ.வை வரவேற்க தென்மாவட்டங்களே திரண்டு வருக... அழைக்கிறார் செல்லூர் ராஜூ
மதுரை: தேவர் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிக்க வரும் முதல்வர் ஜெயலலிதாவை தென்மாவட்டங்கள் திரண்டு வந்து வரவேற்க வேண்டும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதாவின் 66 பிறந்த நாள் விழாவை கொண்டாடுவது குறித்து மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தெப்பக்குளம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட அவைத் தலைவர் புதூர் துரைப்பாண்டியன் தலைமை வகித்தார். கூட்டத்தில் மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும் கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ கலந்து கொண்டு பேசிதாயவது
கடந்த சட்டசபைத் தேர்தலின் போது, தமிழக மக்கள் ஓரணியில் திரண்டு கருணாநிதியை வீழ்த்தி அ.தி.மு.க.வை அமோக வெற்றி பெறச் செய்தனர். அந்த வெற்றியின் மூலம் தமிழகத்தின் முதல்வராக 3 வது முறையாக முதல்வர் அம்மா பொறுப்பேற்று இந்தியாவே பாராடும்படி பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து செயல்பட்டு வருகின்றார். எந்த மாநிலத்திலும் செய்யாத திட்டங்கள் கிடைக்காத சலுகைகள் தமிழக மக்களுக்கு கிடைத்து வருகிறது.
தமிழக மக்களுக்கு கிடைக்கும் திட்டங்களும், சலுகைகளும் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் கிடைக்க வேண்டும் எனில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றி பெற்று இந்திய நாட்டின் அடுத்த பிரதமராக அம்மா வரவேண்டும். இது நமது எதிர்பார்ப்பு மட்டும் அல்ல. இந்தியாவில் உள்ள 125 கோடி மக்களின் ஏதிர்பார்ப்பு.
பொது மக்களின் கோரிக்கையை ஏற்று முதல்வர் அம்மா வரும் 9 ம் தேதி பசுமபொன் முத்துராமலிங்கத்தேவருக்கு தங்கக் கவசம் அணிவிக்க பசும்பொன் வருகை தர உள்ளார். அப்போது, அவரை வரவேற்க தென்மாவட்டங்கள் திரண்டு வரவேண்டும்.
மதுரையில் இருந்து ஆயிரக்கணக்கான வாகனத்தில் சென்று முதல்வரை வரவேற்க வேண்டும். தென்மாவட்டங்கள் எப்போதும் அதிமுகவின் கோட்டை என்பதை நாம் நிரூபித்துக்காட்ட வேண்டும் என்றார்.
இந்த கூட்டத்தில் மேயர் ராஜன் செல்லப்பா, துணை மேயர் கோபாலகிருஷ்ணன், பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் எம்.எஸ்.பாண்டியன், தொகுதி கழக செயலாளர்கள் கிரம்மர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.