சிறையில் டிவி வச்சிக்கலாம்.. இஷ்டபடி டிரஸ் போட்டுக்கலாம் .. சி.வி.சண்முகம் அதிரடி விளக்கம்
சென்னை: சிறை விதிகளின்படி கைதிகள் தங்கள் அறைகளில் தொலைக்காட்சிகளை வைத்து கொள்ள அனுமதி உள்ளது என்று அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானை சேர்ந்த நபர் உள்ளிட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ள புழல் சிறையில் 18 டிவிகளும் 2 எப் எம் ரேடியோக்களும் கைப்பற்றப்பட்டன. சிறை விதிகளை மீறி இவர்களிடம் இருந்து 2 செல்போன்கள், சிம் கார்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் சீருடை இல்லாமல் சாதாரண உடை அணிந்த படி பாகிஸ்தான் கைதி சுற்றித் திரியும் புகைப்படங்களும் சொகுசு வசதிகளுடன் நட்சத்திர ஓட்டல் உணவுகள் அவரது அறையில் இருக்கும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
ஒரு மாதத்துக்கு முன்னர்
இதைத் தொடர்ந்து சிறைத் துறை ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா புழல் சிறையில் ஆய்வு மேற்கொண்டார். பாகிஸ்தான் கைதியின் அறையில் இருந்த நட்சத்திர ஹோட்டல் உணவு வகைகள் ரம்ஜான் பண்டிக்கைக்காக சிறப்பு அனுமதி பெற்று வரழைக்கப்பட்டவை. இந்த புகைப்படங்கள் ஒரு மாதத்துக்கு முன்னர் எடுக்கப்பட்டது என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
பொதுமக்கள் அதிர்ச்சி
எனினும் இந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் எப்படி வந்தது என்பது குறித்து விசாரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். சிறைச்சாலையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவது தொடர்பான புகைப்படங்கள் வெளியானதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சண்முகம் பேட்டி
இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறுகையில் முதல் வகுப்பு சிறைகளில் கைதிகள் தொலைக்காட்சிகளை வைத்துக் கொள்ள சிறை விதி அனுமதிக்கிறது.
செல்போன் பயன்பாடு
சிறை விதிகளின்படி கைதிகள் தங்களின் அறைகளில் வர்ணம் பூசிக் கொள்ளலாம். சிறைகளில் கைதிகள் செல்போன் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் நல்ல முடிவு
பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்வது குறித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது. அந்த தீர்மானமானது ஆளுநருக்கு பரிந்துரைத்த நிலையில் சட்டத்திற்குட்பட்டு அதன் மீது ஆளுநர் முடிவு எடுப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்றார் சண்முகம்.